மடையில் வாளை பாடல் வரிகள் (mataiyil valai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கோலக்கா – சீர்காழி(தென்பாதி) தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருக்கோலக்கா – சீர்காழி(தென்பாதி)
சுவாமி : சப்தபுரீஸ்வரர்
அம்பாள் : ஓசை கொடுத்த நாயகி

மடையில் வாளை

மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ்
உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ. 1

பெண்டான் பாக மாகப் பிறைச்சென்னி
கொண்டான் கோலக் காவு கோயிலாக்
கண்டான் பாதங் கையாற் கூப்பவே
உண்டான் நஞ்சை உலக முய்யவே. 2

பூணற் பொறிகொள் அரவம் புன்சடைக்
கோணற் பிறையன் குழகன் கோலக்கா
மாணப் பாடி மறைவல் லானையே
பேணப் பறையும் பிணிக ளானவே. 3

தழுக்கொள் பாவந் தளர வேண்டுவீர்
மழுக்கொள் செல்வன் மறிசே ரங்கையான்
குழுக்கொள் பூதப் படையான் கோலக்கா
இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே. 4

மயிலார் சாயல் மாதோர் பாகமா
எயிலார் சாய எரித்த1 எந்தைதன்
குயிலார் சோலைக் கோலக் காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே.

பாடம் : 1 எயிலார் புரமூன் றெரித்த 5

வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்
கடிகொள் கொன்றை கலந்த சென்னியான்
கொடிகொள் விழவார் கோலக் காவுளெம்
அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே. 6

நிழலார் சோலை நீல வண்டினங்
குழலார் பண்செய் கோலக் காவுளான்
கழலான் மொய்த்த பாதங் கைகளால்
தொழலார் பக்கல் துயர மில்லையே. 7

எறியார் கடல்சூழ் இலங்கைக் கோன்றனை
முறியார் தடக்கை யடர்த்த மூர்த்திதன்
குறியார் பண்செய் கோலக் காவையே
நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே. 8

நாற்ற மலர்மேல் அயனும் நாகத்தில்
ஆற்ற லணைமே லவனுங் காண்கிலாக்
கூற்ற முதைத்த குழகன் கோலக்கா
ஏற்றான் பாதம் ஏத்தி வாழ்மினே. 9

பெற்ற மாசு பிறக்குஞ் சமணரும்
உற்ற துவர்தோ யுருவி லாளருங்
குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்
பற்றிப் பரவப் பறையும் பாவமே. 10

நலங்கொள் காழி ஞான சம்பந்தன்
குலங்கொள் கோலக் காவு ளானையே
வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார்
உலங்கொள் வினைபோய் ஓங்கி வாழ்வரே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment