உடையர் கோவண பாடல் வரிகள் (utaiyar kovana) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்பைஞ்ஞீலி தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருப்பைஞ்ஞீலி
சுவாமி : நீலகண்டேசுவரர்
அம்பாள் : விசாலாக்ஷி

உடையர் கோவண

உடையர் கோவண
மொன்றுங் குறைவிலர்
படைகொள் பாரிடஞ்
சூழ்ந்தபைஞ் ஞீலியார்
சடையிற் கங்கை
தரித்த சதுரரை
அடைய வல்லவர்க்
கில்லை அவலமே. 1

மத்த மாமலர்
சூடிய மைந்தனார்
சித்த ராய்த்திரி
வார்வினை தீர்ப்பரால்
பத்தர் தாந்தொழு
தேத்துபைஞ் ஞீலியெம்
அத்த னைத்தொழ
வல்லவர் நல்லரே. 2

விழுது சூலத்தன்
வெண்மழு வாட்படைக்
கழுது துஞ்சிருட்
காட்டகத் தாடலான்
பழுதொன் றின்றிப்பைஞ்
ஞீலிப் பரமனைத்
தொழுது செல்பவர்
தம்வினை தூளியே. 3

ஒன்றி மாலும்
பிரமனுந் தம்மிலே
நின்ற சூழ
லறிவரி யானிடஞ்
சென்று பாரிட
மேத்துபைஞ் ஞீலியுள்
என்றும் மேவி
யிருந்த அடிகளே. 4

வேழத் தின்னுரி
போர்த்த விகிர்தனார்
தாழச் செஞ்சடை
மேற்பிறை வைத்தவர்
தாழைத் தண்பொழில்
சூழ்ந்தபைஞ் ஞீலியார்
யாழின் பாட்டை
யுகந்த அடிகளே. 5

குண்டு பட்டுக்
குறியறி யாச்சமண்
மிண்ட ரோடு
படுத்துய்யப் போந்துநான்
கண்டங் கார்வயல்
சூழ்ந்தபைஞ் ஞீலியெம்
அண்ட வாணன்
அடியடைந் துய்ந்தனே. 6

வரிப்பை யாடர
வாட்டி மதகரி
உரிப்பை மூடிய
வுத்தம னாருறை
திருப்பைஞ் ஞீலி
திசைதொழு வார்கள்போய்
இருப்பர் வானவ
ரோடினி தாகவே. 7

கோடல் கோங்கம்
புறவணி முல்லைமேல்
பாடல் வண்டிசை
கேட்கும்பைஞ் ஞீலியார்
பேடு மாணும்
பிறரறி யாததோர்
ஆடு நாகம்
அசைத்த அடிகளே. 8

காரு லாமலர்க்
கொன்றையந் தாரினான்
வாரு லாமுலை
மங்கையோர் பங்கினன்
தேரு லாம்பொழில்
சூழ்ந்தபைஞ் ஞீலியெம்
ஆர்கி லாவமு
தையடைந் துய்ம்மினே. 9

தருக்கிச் சென்று
தடவரை பற்றலும்
நெருக்கி யூன்ற
நினைந்து சிவனையே
அரக்கன் பாட
அருளுமெம் மானிடம்
இருக்கை ஞீலியென்
பார்க்கிட ரில்லையே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment