தோடொர் காதினன் – திருவிருக்குக்குறள் பாடல் வரிகள் (totor katinan – tiruvirukkukkural) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவிடைமருதூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவிடைமருதூர்
சுவாமி : மகாலிங்கேசுவரர்
அம்பாள் : பிருகச்சுந்தரகுஜாம்பிகை

தோடொர் காதினன் – திருவிருக்குக்குறள்

தோடொர் காதினன், பாடும் மறையினன்
காடு பேணிநின், றாடும் மருதனே. 1

கருதார் புரமெய்வர், எருதே இனிதூர்வர்
மருதே யிடமாகும், விருதாம் வினைதீர்ப்பே. 2

எண்ணும் அடியார்கள், அண்ணல் மருதரைப்
பண்ணின் மொழிசொல்ல, விண்ணுந் தமதாமே. 3

விரியார் சடைமேனி, எரியார் மருதரைத்
தரியா தேத்துவார், பெரியா ருலகிலே. 4

பந்த விடையேறும், எந்தை மருதரைச்
சிந்தை செய்பவர், புந்தி நல்லரே. 5

கழலுஞ் சிலம்பார்க்கும், எழிலார் மருதரைத்
தொழலே பேணுவார்க், குழலும் வினைபோமே. 6

பிறையார் சடையண்ணல், மறையார் மருதரை
நிறையால் நினைபவர், குறையா ரின்பமே. 7

எடுத்தான் புயந்தன்னை, அடுத்தார் மருதரைத்
தொடுத்தார் மலர்சூட்ட, விடுத்தார் வேட்கையே. 8

இருவர்க் கெரியாய, உருவ மருதரைப்
பரவி யேத்துவார், மருவி வாழ்வரே. 9

நின்றுண் சமண்தேரர், என்று மருதரை
அன்றி யுரைசொல்ல, நன்று மொழியாரே. 10

கருது சம்பந்தன், மருத ரடிபாடிப்
பெரிதுந் தமிழ்சொல்லப், பொருத வினைபோமே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment