திடமலி மதிலணி பாடல் வரிகள் (titamali matilani) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருச்சிறுகுடி தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருச்சிறுகுடி
சுவாமி : மங்களேசுவரர்
அம்பாள் : மங்களநாயகியம்மை

திடமலி மதிலணி

திடமலி மதிலணி சிறுகுடி மேவிய
படமலி அரவுடை யீரே
படமலி அரவுடை யீருமைப் பணிபவர்
அடைவதும் அமருல கதுவே. 1

சிற்றிடை யுடன்மகிழ் சிறுகுடி மேவிய
சுற்றிய சடைமுடி யீரே
சுற்றிய சடைமுடி யீரும தொழுகழல்
உற்றவர் உறுபிணி யிலரே. 2

தெள்ளிய புனலணி சிறுகுடி மேவிய
துள்ளிய மானுடை யீரே
துள்ளிய மானுடை யீரும தொழுகழல்
உள்ளுதல் செயநலம் உறுமே. 3

செந்நெல வயலணி சிறுகுடி மேவிய
ஒன்னலர் புரமெரித் தீரே
ஒன்னலர் புரமெரித் தீருமை யுள்குவார்
சொன்னலம் உடையவர் தொண்டே. 4

செற்றினின் மலிபுனல் சிறுகுடி மேவிய
பெற்றிகொள் பிறைமுடி யீரே
பெற்றிகொள் பிறைமுடி யீருமைப் பேணிநஞ்
சற்றவர் அருவினை யிலரே. 5

செங்கயல் புனலணி சிறுகுடி மேவிய
மங்கையை இடமுடை யீரே
மங்கையை இடமுடை யீருமை வாழ்த்துவார்
சங்கைய திலர்நலர் தவமே. 6

செறிபொழில் தழுவிய சிறுகுடி மேவிய
வெறிகமழ் சடைமுடி யீரே
வெறிகமழ் சடைமுடி யீருமை விரும்பிமெய்ந்
நெறியுணர் வோருயர்ந் தோரே. 7

திசையவர் தொழுதெழு சிறுகுடி மேவிய
தசமுகன் உரநெரித் தீரே
தசமுகன் உரநெரித் தீருமைச் சார்பவர்
வசையறும் அதுவழி பாடே. 8

செருவரை வயலமர் சிறுகுடி மேவிய
இருவரை அசைவுசெய் தீரே
இருவரை அசைவுசெய் தீருமை யேத்துவார்
அருவினை யொடுதுய ரிலரே. 9

செய்த்தலை புனலணி சிறுகுடி மேவிய
புத்தரொ டமண்புறத் தீரே
புத்தரொ டமண்புறத் தீருமைப் போற்றுதல்
பத்தர்கள் தம்முடைப் பரிசே. 10

தேனமர் பொழிலணி சிறுகுடி மேவிய
மானமர் கரமுடை யீரே
மானமர் கரமுடை யீருமை வாழ்த்திய
ஞானசம் பந்தன தமிழே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment