தேரையு மேல்க பாடல் வரிகள் (teraiyu melka) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருமறைக்காடு – வேதாரண்யம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருமறைக்காடு – வேதாரண்யம்
சுவாமி : மறைக்காட்டுமணாளர்
அம்பாள் : யாழைப்பழித்தமொழியம்மை

தேரையு மேல்க

தேரையு மேல்க டாவித்
திண்ணமாத் தெழித்து நோக்கி
யாரையு மேலு ணரா
ஆண்மையான் மிக்கான் தன்னைப்
பாரையும் விண்ணும் அஞ்சப்
பரந்த தோள் முடியடர்த்துக்
காரிகை அஞ்ச லென்பார்
கலிமறைக் காட னாரே. 1

முக்கிமுன் வெகுண்டெ டுத்த முடியுடை அரக்கர்கோனை
நக்கிருந் தூன்றிச் சென்னி நாண்மதி வைத்த எந்தை
அக்கர வாமை பூண்ட அழகனார் கருத்தி னாலே
தெக்குநீர்த் திரைகள் மோதுந் திருமறைக் காட னாரே. 2

மிகப்பெருத் துலாவ மிக்கா னக்கொரு தேர்க டாவி
அகப்படுத் தென்று தானும் ஆண்மையால் மிக்க ரக்கன்
உகைத்தெடுத் தான்ம லையை ஊன்றலும் அவனை யாங்கே
நகைப்படுத் தருளி னானூர் நான்மறைக் காடு தானே. 3

அந்தரந் தேர்க டாவி யாரிவ னென்று சொல்லி
உந்தினான் மாம லையை ஊன்றலும் ஒள்ள ரக்கன்
பந்தமாந் தலைகள் பத்தும் வாய்கள்விட் டலறி வீழச்
சிந்தனை செய்து விட்டார் திருமறைக் காட னாரே. 4

தடுக்கவுந் தாங்க வொண்ணாத் தன்வலி யுடைய னாகிக்
கடுக்கவோர் தேர்க டாவிக் கையிரு பதுக ளாலும்
எடுப்பன்நான் என்ன பண்ட மென்றெடுத் தானை ஏங்க
அடுக்கவே வல்ல னூராம் அணிமறைக் காடு தானே. 5

நாண்முடிக் கின்ற சீரான் நடுங்கியே மீது போகான்
கோள்பிடித் தார்த்த கையான் கொடியன்மா வலிய னென்று
நீண்முடிச் சடையர் சேரும் நீள்வரை யெடுக்க லுற்றான்
தோண்முடி நெரிய வைத்தார் தொன்மறைக் காட னாரே. 6

பத்துவாய் இரட்டிக் கைக ளுடையன்மா வலிய னென்று
பொத்திவாய் தீமை செய்த பொருவலி அரக்கர் கோனைக்
கத்திவாய் கதற அன்று கால்விர லூன்றி யிட்டார்
முத்துவாய்த் திரைகள் மோதும் முதுமறைக் காட னாரே. 7

பக்கமே விட்ட கையான் பாங்கிலா மதிய னாகிப்
புக்கனன் மாம லைக்கீழ்ப் போதுமா றறிய மாட்டான்
மிக்கமா மதிகள் கெட்டு வீரமும் இழந்த வாறே
நக்கன பூத மெல்லாம் நான்மறைக் காட னாரே. 8

நாணஞ்சு கைய னாகி நன்முடி பத்தி னோடு
பாணஞ்சு முன்னி ழந்த பாங்கிலா மதிய னாகி
நீணஞ்சு தானு ணரா நின்றெடுத் தானை அன்று
ஏணஞ்சு கைகள் செய்தார் எழில்மறைக் காட னாரே. 9

கங்கைநீர் சடையுள் வைக்கக் காண்டலும் மங்கை யூடத்
தென்கையான் தேர்க டாவிச் சென்றெடுத் தான் மலையை
முன்கைமா நரம்பு வெட்டி முன்னிருக் கிசைகள் பாட
அங்கைவாள் அருளி னானூர் அணிமறைக் காடு தானே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment