தம்மானங் காப்ப பாடல் வரிகள் (tam manan kappa) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் குறைந்த – திருநேரிசை தலம் பொதுப் பதிகங்கள் நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : பொதுப் பதிகங்கள்
தலம் : குறைந்த – திருநேரிசைதம்மானங் காப்ப

தம்மானங் காப்ப தாகித்
தையலார் வலையு ளாழ்ந்து
அம்மானை அமுதன் றன்னை
ஆதியை அந்த மாய
செம்மான ஒளிகொள் மேனிச்
சிந்தையு ளொன்றி நின்ற
எம்மானை நினைய மாட்டேன்
என்செய்வான் தோன்றி னேனே. 1

மக்களே மணந்த தார
மவ்வயிற் றவரை யோம்புஞ்
சிக்குளே யழுந்தி ஈசன்
திறம்படேன் றவம தோரேன்
கொப்புளே போலத் தோன்றி
யதனுளே மறையக் கண்டும்
இக்களே பரத்தை யோம்ப
என்செய்வான் தோன்றி னேனே. 2

கூழையே னாக மாட்டேன்
கொடுவினைக் குழியில் வீழ்ந்து
ஏழினின் னிசையி னாலும்
இறைவனை யேத்த மாட்டேன்
மாழையொண் கண்ணின் நல்ல
மடந்தைமார் தமக்கும் பொல்லேன்
ஏழையே னாகி நாளு
மென்செய்வான் தோன்றி னேனே. 3

முன்னையென் வினையி னாலே
மூர்த்தியை நினைய மாட்டேன்
பின்னைநான் பித்த னாகிப்
பிதற்றுவன் பேதை யேன்நான்
என்னுளே மன்னி நின்ற
சீர்மைய தாயி னானை
என்னுளே நினைய மாட்டேன்
என்செய்வான் தோன்றி னேனே. 4

கறையணி கண்டன் றன்னைக்
காமரங் கற்று மில்லேன்
பிறைநுதற் பேதை மாதர்
பெய்வளை யார்க்கு மல்லேன்
மறைநவில் நாவி னானை
மன்னிநின் றிறைஞ்சி நாளும்
இறையேயு மேத்த மாட்டேன்
என்செய்வான் தோன்றி னேனே. 5

இப்பதிகத்தில் 6-ம்செய்யுட்கள்
மறைந்து போயின. 6

இப்பதிகத்தில் 7-ம்செய்யுட்கள்
மறைந்து போயின. 7

இப்பதிகத்தில் 8-ம்செய்யுட்கள்
மறைந்து போயின. 8

இப்பதிகத்தில் 9-ம்செய்யுட்கள்
மறைந்து போயின. 9

வளைத்துநின் றைவர் கள்வர்
வந்தெனை நடுக்கஞ் செய்யத்
தளைத்துவைத் துலையை யேற்றித்
தழலெரி மடுத்த நீரில்
திளைத்துநின் றாடு கின்ற
ஆமைபோல் தெளிவி லாதேன்
இளைத்துநின் றாடு கின்றேன்
என்செய்வான் தோன்றி னேனே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment