பொன்னுள் ளத்திரள் பாடல் வரிகள் (ponnul lattiral) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் மனத்தொகை தலம் பொதுப் பதிகங்கள் நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : பொதுப் பதிகங்கள்
தலம் : மனத்தொகைபொன்னுள் ளத்திரள்

பொன்னுள் ளத்திரள்
புன்சடை யின்புறம்
மின்னுள் ளத்திரள்
வெண்பிறை யாயிறை
நின்னுள் ளத்தருள்
கொண்டிருள் நீங்குதல்
என்னுள் ளத்துள
தெந்தை பிரானிரே. 1

முக்க ணும்முடை
யாய்முனி கள்பலர்
தொக்கெ ணுங்கழ
லாயொரு தோலினோ
டக்க ணும்மரை
யாயரு ளேயலா
தெக்க ணும்மிலன்
எந்தை பிரானிரே. 2

பனியாய் வெங்கதிர்
பாய்படர் புன்சடை
முனியாய் நீயுல
கம்முழு தாளினுந்
தனியாய் நீசரண்
நீசல மேபெரி
தினியாய் நீயெனக்
கெந்தை பிரானிரே. 3

மறையும் பாடுதிர்
மாதவர் மாலினுக்
குறையு மாயினை
கோளர வோடொரு
பிறையுஞ் சூடினை
யென்பத லாற்பிறி
திறையுஞ் சொல்லிலை
எந்தை பிரானிரே. 4

பூத்தார் கொன்றையி
னாய்புலி யின்னதள்
ஆர்த்தா யாடர
வோடன லாடிய
கூத்தா நின்குரை
யார்கழ லேயல
தேத்தா நாவெனக்
கெந்தை பிரானிரே. 5

பைம்மா லும்மர
வாபர மாபசு
மைம்மால் கண்ணியோ
டேறுமைந் தாவெனும்
அம்மா லல்லது
மற்றடி நாயினேற்
கெம்மா லும்மிலன்
எந்தை பிரானிரே. 6

வெப்பத் தின்மன
மாசு விளக்கிய
செப்பத் தாற்சிவ
னென்பவர் தீவினை
ஒப்பத் தீர்த்திடும்
ஒண்கழ லாற்கல்ல
தெப்பற் றும்மிலன்
எந்தை பிரானிரே. 7

திகழுஞ் சூழ்சுடர்
வானொடு வைகலும்
நிகழு மொண்பொரு
ளாயின நீதியென்
புகழு மாறு
மலானுன பொன்னடி
இகழு மாறிலன்
எந்தை பிரானிரே. 8

கைப்பற் றித்திரு
மால்பிர மன்னுனை
எப்பற் றியறி
தற்கரி யாயருள்
அப்பற் றல்லது
மற்றடி நாயினேன்
எப்பற் றும்மிலன்
எந்தை பிரானிரே. 9

எந்தை யெம்பிரான்
என்றவர் மேல்மனம்
எந்தை யெம்பிரான்
என்றிறைஞ் சித்தொழு
தெந்தை யெம்பிரான்
என்றடி யேத்துவார்
எந்தை யெம்பிரான்
என்றடி சேர்வரே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment