நின்று மலர்தூவி – திருவிருக்குக்குறள் பாடல் வரிகள் (ninru malartuvi – tiruvirukkukkural) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருமுதுகுன்றம் – விருத்தாசலம் தலம் நடுநாடு நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : நடுநாடு
தலம் : திருமுதுகுன்றம் – விருத்தாசலம்
சுவாமி : விருத்தகிரீஸ்வரர்
அம்பாள் : விருத்தாம்பிகை

நின்று மலர்தூவி – திருவிருக்குக்குறள்

நின்று மலர்தூவி, இன்று முதுகுன்றை
நன்றும் ஏத்துவீர்க், கென்றும் இன்பமே. 1

அத்தன் முதுகுன்றைப், பத்தி யாகிநீர்
நித்தம் ஏத்துவீர்க், குய்த்தல் செல்வமே. 2

ஐயன் முதுகுன்றைப், பொய்கள் கெடநின்று
கைகள் கூப்புவீர், வையம் உமதாமே. 3

ஈசன் முதுகுன்றை, நேச மாகிநீர்
வாச மலர்தூவப், பாச வினைபோமே. 4

மணியார் முதுகுன்றைப், பணிவா ரவர்கண்டீர்
பிணியா யினகெட்டுத், தணிவா ருலகிலே. 5

மொய்யார் முதுகுன்றில், ஐயா வெனவல்லார்
பொய்யா ரிரவோர்க்குச், செய்யாள் அணியாளே. 6

விடையான் முதுகுன்றை, இடையா தேத்துவார்
படையா யினசூழ, உடையா ருலகமே. 7

பத்துத் தலையோனைக், கத்த விரலூன்றும்
அத்தன் முதுகுன்றை, மொய்த்துப் பணிமினே. 8

இருவ ரறியாத, ஒருவன் முதுகுன்றை
உருகி நினைவார்கள், பெருகி நிகழ்வோரே. 9

தேரர் அமணரும், சேரும் வகையில்லான்1
நேரில் முதுகுன்றை, நீர்நின் றுள்குமே.

பாடம் : 1 வகையில்லா 10

நின்று முதுகுன்றை, நன்று சம்பந்தன்
ஒன்றும் உரைவல்லார், என்றும் உயர்வாரே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment