முத்தா முத்தி தரவல்ல பாடல் வரிகள் (mutta mutti taravalla) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவாலங்காடு – பழையனூர் தலம் தொண்டைநாடு நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : தொண்டைநாடு
தலம் : திருவாலங்காடு – பழையனூர்முத்தா முத்தி தரவல்ல

முத்தா முத்தி தரவல்ல
முகிழ்மென் முலையா ளுமைபங்கா
சித்தா சித்தித் திறங்காட்டுஞ்
சிவனே தேவர் சிங்கமே
பத்தா பத்தர் பலர்போற்றும்
பரமா பழைய னூர்மேய
அத்தா ஆலங் காடாவுன்
அடியார்க் கடியேன் ஆவேனே. 1

பொய்யே செய்து புறம்புறமே
திரிவேன் றன்னைப் போகாமே
மெய்யே வந்திங் கெனையாண்ட
மெய்யா மெய்யர் மெய்ப்பொருளே
பையா டரவம் அரைக்கசைத்த
பரமா பழைய னூர்மேய
ஐயா ஆலங் காடாவுன்
அடியார்க் கடியேன் ஆவேனே. 2

தூண்டா விளக்கின் நற்சோதீ
தொழுவார் தங்கள் துயர்தீர்ப்பாய்
பூண்டாய் எலும்பைப் புரமூன்றும்
பொடியாச் செற்ற புண்ணியனே
பாண்டாழ் வினைக ளவைதீர்க்கும்
பரமா பழைய னூர்மேய
ஆண்டா ஆலங் காடாவுன்
அடியார்க் கடியேன் ஆவேனே. 3

மறிநேர் ஒண்கண் மடநல்லார்
வலையிற் பட்டு மதிமயங்கி
அறிவே அழிந்தே னையாநான்
மையார் கண்ட முடையானே
பறியா வினைக ளவைதீர்க்கும்
பரமா பழைய னூர்மேய
அறிவே ஆலங் காடாவுன்
அடியார்க் கடியேன் ஆவேனே. 4

வேலங் காடு தடங்கண்ணார்
வலையுட் பட்டுன் நெறிமறந்து
மாலங் காடி மறந்தொழிந்தேன்
மணியே முத்தே மரகதமே
பாலங் காடி நெய்யாடி
படர்புன் சடையாய் பழையனூர்
ஆலங் காடா உன்னுடைய
அடியார்க் கடியேன் ஆவேனே. 5

எண்ணார் தங்கள் எயிலெய்த
எந்தாய் எந்தை பெருமானே
கண்ணாய் உலகங் காக்கின்ற
கருத்தா திருத்த லாகாதாய்
பண்ணா ரிசைக ளவைகொண்டு
பலரும் ஏத்தும் பழையனூர்
அண்ணா ஆலங் காடாவுன்
அடியார்க் கடியேன் ஆவேனே. 6

வண்டார் குழலி உமைநங்கை
பங்கா கங்கை மணவாளா
விண்டார் புரங்க ளெரிசெய்த
விடையாய் வேத நெறியானே
பண்டாழ் வினைகள் பலதீர்க்கும்
பரமா பழைய னூர்மேய
அண்டா ஆலங் காடாவுன்
அடியார்க் கடியேன் ஆவேனே. 7

பேழ்வா யரவி னணையானும்
பெரிய மலர்மே லுறைவானுந்
தாழா துன்றன் சரண்பணியத்
தழலாய் நின்ற தத்துவனே
பாழாம் வினைக ளவைதீர்க்கும்
பரமா பழையனூர் தன்னை
ஆள்வாய் ஆலங் காடாவுன்
அடியார்க் கடியேன் ஆவேனே. 8

எம்மான் எந்தை மூத்தப்பன்
ஏழேழ் படிகால் எமையாண்ட
பெம்மான் ஈமப் புறங்காட்டிற்
பேயோ டாடல் புரிவானே
பன்மா மலர்க ளவைகொண்டு
பலரும் ஏத்தும் பழையனூர்
அம்மா ஆலங் காடாவுன்
அடியார்க் கடியேன் ஆவேனே. 9

பத்தர் சித்தர் பலரேத்தும்
பரமன் பழைய னூர்மேய
அத்தன் ஆலங் காடன்றன்
அடிமைத் திறமே அன்பாகிச்
சித்தர் சித்தம் வைத்தபுகழ்ச்
சிறுவன் ஊரன் ஒண்டமிழ்கள்
பத்தும் பாடி ஆடுவார்
பரமன் அடியே பணிவாரே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment