மாதி யன்று மனைக்கிரு பாடல் வரிகள் (mati yanru manaikkiru) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருத்தோணிபுரம் – சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருத்தோணிபுரம் – சீர்காழி
சுவாமி : பிரமபுரீஸ்வரர்
அம்பாள் : திருநிலைநாயகி

மாதி யன்று மனைக்கிரு

மாதி யன்று
மனைக்கிரு வென்றக்கால்
நீதி தான்சொல
நீயெனக் காரெனுஞ்
சோதி யார்தரு
தோணி புரவர்க்குத்
தாதி யாவன்நா
னென்னுமென் தையலே. 1

நக்கம் வந்து
பலியிடென் றார்க்கிட்ட
மிக்க தையலை
வெள்வளை கொள்வது
தொக்க நீர்வயல்
தோணி புரவர்க்குத்
தக்க தன்று
தமது பெருமைக்கே. 2

கெண்டை போல்நய
னத்திம வான்மகள்
வண்டு வார்குழ
லாளுட னாகவே
துண்ட வான்பிறைத்
தோணி புரவரைக்
கண்டு காமுறு
கின்றனள் கன்னியே. 3

பாலை யாழ்மொழி
யாளவள் தாழ்சடை
மேல ளாவது
கண்டனள் விண்ணுறச்
சோலை யார்தரு
தோணி புரவர்க்குச்
சால நல்லளா
கின்றனள் தையலே. 4

பண்ணின் நேர்மொழி
யாள்பலி யிட்டவிப்
பெண்ணை மால்கொடு
பெய்வளை கொள்வது
சுண்ண மாடிய
தோணி புரத்துறை
அண்ண லாருக்குச்
சால அழகிதே. 5

முல்லை வெண்ணகை
மொய்குழ லாயுனக்
கல்ல னாவ
தறிந்திலை நீகனித்
தொல்லை யார்பொழில்
தோணி புரவர்க்கே
நல்லை யாயிடு
கின்றனை நங்கையே. 6

ஒன்று தானறி
யாருல கத்தவர்
நின்று சொல்லி
நிகழ்ந்த நினைப்பிலர்
துன்று வார்பொழில்
தோணி புரவர்தங்
கொன்றை சூடுங்
குறிப்பது வாகுமே. 7

உறவு பேய்க்கணம்
உண்பது வெண்டலை
உறைவ தீமம்
உடலிலோர் பெண்கொடி
துறைக ளார்கடல்
தோணி புரத்துறை
இறைவ னார்க்கிவள்
என்கண்டன் பாவதே. 8

மாக யானை
மருப்பேர் முலையினர்
போக யானு
மவள்புக்க தேபுகத்
தோகை சேர்தரு
தோணி புரவர்க்கே
ஆக யானு
மவர்க்கினி யாளதே. 9

இட்ட மாயின
செய்வாளென் பெண்கொடி
கட்டம் பேசிய
காரரக் கன்றனைத்
துட்ட டக்கிய
தோணி புரத்துறை
அட்ட மூர்த்திக்கு
அன்பது வாகியே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment