மண்ணது வுண்டரி பாடல் வரிகள் (mannatu vuntari) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் ஆனைக்கா தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு வடகரை
தலம் : ஆனைக்கா
சுவாமி : நீர்த்தீரள்நாதர்
அம்பாள் : அகிலாண்டநாயகி

மண்ணது வுண்டரி

மண்ணது வுண்டரி மலரோன்காணா
வெண்ணாவல் விரும்பும யேந்திரருங்
கண்ணது வோங்கிய கயிலையாரும்
அண்ணல்ஆ ரூராதி யானைக்காவே. 1

வந்துமா லயனவர் காண்பரியார்
வெந்தவெண் ணீறணி மயேந்திரருங்
கந்தவார் சடையுடைக் கயிலையாரும்
அந்தண்ஆ ரூராதி யானைக்காவே. 2

மாலயன் தேடிய மயேந்திரருங்
காலனை உயிர்கொண்ட கயிலையாரும்
வேலைய தோங்கும்வெண் ணாவலாரும்
ஆலைஆ ரூராதி யானைக்காவே. 3

கருடனை யேறரி அயனார்காணார்
வெருள்விடை யேறிய மயேந்திரருங்
கருடரு கண்டத்தெம் கயிலையாரும்
அருளன்ஆ ரூராதி யானைக்காவே. 4

மதுசூதனன் நான்முகன் வணங்கரியார்
மதியது சொல்லிய மயேந்திரருங்
கதிர்முலை புல்கிய கயிலையாரும்
அதியன்ஆ ரூராதி யானைக்காவே. 5

சக்கரம் வேண்டுமால் பிரமன்காணா
மிக்கவர் கயிலை மயேந்திரருந்
தக்கனைத் தலையரி தழலுருவர்
அக்கணி யவராரூர் ஆனைக்காவே. 6

கண்ணனும் நான்முகன் காண்பரியார்
வெண்ணாவல் விரும்பு மயேந்திரருங்
கண்ணப்பர்க் கருள்செய்த கயிலையெங்கள்
அண்ணல்ஆ ரூராதி யானைக்காவே. 7

கடல்வண்ணன் நான்முகன் காண்பரியார்
தடவரை யரக்கனைத் தலைநெரித்தார்
விடமது வுண்டவெம் மயேந்திரரும்
அடல்விடை யாரூராதி யானைக்காவே 8

ஆதிமால் அயனவர் காண்பரியார்
வேதங்கள் துதிசெயும் மயேந்திரருங்
காதிலோர் குழையுடைக் கயிலையாரும்
ஆதிஆ ரூரெந்தை யானைக்காவே. 9

அறிவில் அமண்புத்தர் அறிவுகொள்ளேல்
வெறியமான் கரத்தாரூர் மயேந்திரரும்
மறிகட லோன்அயன் தேடத்தானும்
அறிவரு கயிலையோன் ஆனைக்காவே. 10

ஏனமா லயனவர் காண்பரியார்
கானமார் கயிலைநன் மயேந்திரரும்
ஆனஆ ரூராதி யானைக்காவை
ஞானசம் பந்தன தமிழ்சொல்லுமே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment