Kuzhaitha pathu lyrics in tamil

குழைத்த பத்து பாடல் வரிகள் (Kuzhaitha Pathu lyrics tamil)

அருளியவர் : மாணிக்கவாசகர்
தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)
நாடு : பாண்டியநாடு

சிறப்பு: ஆத்தும நிவேதனம்; அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

குழைத்தால் பண்டைக் கொடுவினைநோய்
காவாய் உடையாய் கொடுவினையேன்
உழைத்தா லுறுதியுண்டோ தான்
உமையாள் கணவா எனை ஆள்வாய்
பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ
பிறைசேர் சடையாய் முறையோவென்
றழைத்தால் அருளா தொழிவதே
அம்மானே உன்னடியேற்கே. 1

அடியேன் அல்லல் எல்லாம்முன
அகலஆண்டாய் என்றிருந்தேன்
கொடியே ரிடையாள் கூறாஎங்கோவே
ஆவா என்றருளிச்
செடிசேர் உடலைச் சிதையாத தெத்துக்
கெங்கள் சிவலோகா
உடையாய் கூவிப் பணிகொள்ளா தொறுத்தால்
ஒன்றும் போதுமே. 2

ஒன்றும் போதா நாயேனை உய்யக்
கொண்ட நின்கருணை
இன்றே இன்றிப் போய்த்தோதான் ஏழை
பங்கா எங்கோவே
குன்றே அனைய குற்றங்கள் குணமா
மென்றே நீகொண்டால்
என்றான் கெட்ட திரங்கிடாய் எண்தோள்
முக்கண் எம்மானே. 3

மானேர் நோக்கி மணவாளா மன்னே
நின்சீர் மறப்பித்திவ்
வூனே புகஎன்தனைநூக்கி உழலப்
பண்ணு வித்திட்டாய்
ஆனால் அடியேன் அறியாமை அறிந்து
நீயே அருள்செய்து
கோனே கூவிக் கொள்ளுநாள் என்றென்
றுன்னைக் கூறுவதே. 4

கூறும் நாவே முதலாகக் கூறுங்
கரணம் எல்லாம்நீ
தேறும் வகைநீ திகைப்புநீ தீமை
நன்மை முழுதும்நீ
வேறோர் பரிசிங் கொன்றில்லை மெய்ம்மை
உன்னை விரித்துரைக்கில்
தேறும் வகைஎன் சிவலோகா திகைத்தால்
தேற்ற வேண்டாவோ. 5

வேண்டத்தக்க தறிவோய்நீ வேண்ட
முழுதுந் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி
என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய் யானும்
அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும்
உன்றன் விருப்பன்றே. 6

அன்றே என்றன் ஆவியும் உடலும்
உடைமை எல்லாமுங்
குன்றே அனையாய் என்னைஆட் கொண்ட
போதே கொண்டிலையோ
இன்றோர் இடையூ றெனக்குண்டோ எண்தோள்
முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ
இதற்கு நாயகமே. 7

நாயிற் கடையாம் நாயேனை நயந்து
நீயே ஆட்கொண்டாய்
மாயப் பிறவி உன்வசமே
வைத்திட்டிருக்கும் அதுவன்றி
ஆயக்கடவேன் நானோதான்
என்ன தோஇங் கதிகாரங்
காயத் திடுவாய் உன்னுடைய
கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே. 8

கண்ணார் நுதலோய் கழலிணைகள் கண்டேன்
கண்கள் களிகூர
எண்ணா திரவும் பகலும்நான் அவையே
எண்ணும் அதுவல்லால்
மண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன்
கழற்கே புகுமாறும்
அண்ணா எண்ணக் கடவேனோ அடிமை
சால அழகுடைத்தே. 9

அழகே புரிந்திட் டடிநாயேன்
அரற்று கின்றேன் உடையானே
திகழா நின்ற திருமேனி காட்டி
என்னைப் பணிகொண்டாய்
புகழே பெரிய பதம்எனக்குப் புராண
நீதந் தருளாதே
குழகா கோல மறையோனே கோனே
என்னைக் குழைத்தாயே. 10

Leave a Comment