கூற்றாயின வாறு பாடல் வரிகள் (kurrayina varu) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவதிகைவீரட்டானம் தலம் நடுநாடு நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : நடுநாடு
தலம் : திருவதிகைவீரட்டானம்
சுவாமி : வீரட்டானேஸ்வரர்
அம்பாள் : திரிபுரசுந்தரி

கூற்றாயின வாறு

கூற்றாயின வாறுவி லக்ககிலீர்
கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே. 1

நெஞ்சம்முமக் கேயிட மாகவைத்தேன்
நினையாதொரு போதும் இருந்தறியேன்
வஞ்சம்மிது வொப்பது கண்டறியேன்
வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சாகி வந்தென்னை நலிவதனை
நணுகாமல் துரந்து கரந்துமிடீர்
அஞ்சேலுமென் னீர்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே. 2

பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர்
படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்
துணிந்தேயுமக் காட்செய்து வாழலுற்றாற்
சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர்
பெற்றமேற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண்
டணிந்தீரடி கேள்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மனே. 3

முன்னம்மடி யேன்அறி யாமையினான்
முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்
பின்னையடி யேனுமக் காளும்பட்டேன்
சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
தன்னையடைந் தார்வினை தீர்ப்பதன்றோ
தலையாயவர் தங்கட னாவதுதான்
அன்னநடை யார்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே. 4

காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையாற்
கரைநின்றவர் கண்டுகொ ளென்றுசொல்லி
நீத்தாய கயம்புக நூக்கியிட
நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன்
வார்த்தையிது வொப்பது கேட்டறியேன்
வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார்புன லார்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே. 5

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன்னாமம் என்னாவில் மறந்தறியேன்
உலர்ந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய்
உடலுள் ளுறுசூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே. 6

உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும்
ஒருவர்தலை காவலி லாமையினால்
வயந்தேயுமக் காட்செய்து வாழலுற்றால்
வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்
பயந்தேயென் வயிற்றின கம்படியே
பறித்துப்புரட் டியறுத் தீர்த்திடநான்
அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில
வீரட்டா னாத்துறை அம்மானே. 7

வலித்தேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன்
வஞ்சம்மன மொன்று மிலாமையினாற்
சலித்தாலொரு வர்துணை யாருமில்லைச்
சங்கவெண்குழைக் காதுடை எம்பெருமான்
கலித்தேயென் வயிற்றி னகம்படியே
கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்துதின்ன
அலுத்தேனடி யேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே. 8

பொன்போல மிளிர்வதொர் மேனியினீர்
புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர்
துன்பேகவ லைபிணி யென்றிவற்றை
நணுகாமற் றுரந்து கரந்துமிடீர்
என்போலிக ளும்மை இனித்தெளியார்
அடியார்படு வதிது வேயாகில்
அன்பேஅமை யும்மதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே. 9

போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல்
புறங்காடரங் காநட மாடவல்லாய்
ஆர்த்தானரக் கன்றனை மால்வரைக்கீழ்
அடர்த்திட்டருள் செய்த வதுகருதாய்
வேர்த்தும்புரண் டும்விழுந் தும்மெழுந்தால்
என்வேதனை யான விலக்கியிடாய்
ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே.

இத்தலம் நடு நாட்டிலுள்ளது.

இப்பதிகம் சூலை நோய் தீர ஓதியருளியது. 10

திருச்சிற்றம்பலம்04.002 சுண்ணவெண் சந்தனச்

சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ்
சுடர்த் திங்கட் சூளாமணியும்
வண்ண உரிவை யுடையும்
வளரும் பவள நிறமும்
அண்ணல் அரண்முர ணேறும்
அகலம் வளாய அரவும்
திண்ணன் கெடிலப் புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்

அஞ்சுவ தியாதொன்று மில்லை
அஞ்ச வருவது மில்லை. 1

பூண்டதொர் கேழல் எயிறும்
பொன்றிகழ் ஆமை புரள
நீண்டதிண் டோ ள்வலஞ் சூழ்ந்து
நிலாக்கதிர் போலவெண் ணூலுங்
காண்டகு புள்ளின் சிறகுங்
கலந்தகட் டங்கக் கொடியும்
ஈண்டு கெடிலப் புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்

அஞ்சுவ தியாதொன்று மில்லை
அஞ்ச வருவது மில்லை. 2

ஒத்த வடத்திள நாகம்
உருத்திர பட்ட மிரண்டும்
முத்து வடக்கண் டிகையும்
முளைத்தெழு மூவிலை வேலுஞ்
*சித்த வடமும் அதிகைச்
சேணுயர் வீரட்டஞ் சூழ்ந்து
தத்துங் கெடிலப் புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்

அஞ்சுவ தியாதொன்று மில்லை
அஞ்ச வருவது மில்லை.

(*) சித்தவடம் என்பது இத்தலத்துக்குச் சமீபத்திலிருப்பது. 3

மடமான் மறிபொற் கலையும்
மழுப்பாம் பொருகையில் வீணை
குடமால் வரைய திண்டோ ளுங்
குனிசிலைக் கூத்தின் பயில்வும்
இடமால் தழுவிய பாகம்
இருநில னேற்ற சுவடுந்
தடமார் கெடிலப் புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்

அஞ்சுவ தியாதொன்று மில்லை
அஞ்ச வருவது மில்லை. 4

பலபல காமத்த ராகிப்
பதைத்தெழு வார்மனத் துள்ளே
கலமலக் கிட்டுத் திரியுங்
கணபதி யென்னுங் களிறும்
வலமேந் திரண்டு சுடரும்
வான்கயி லாய மலையும்
நலமார் கெடிலப் புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்

அஞ்சுவ தியாதென்று மில்லை
அஞ்ச வருவது மில்லை. 5

கரந்தன கொள்ளி விளக்குங்
கறங்கு துடியின் முழக்கும்
பரந்த பதினெண் கணமும்
பயின்றறி யாதன பாட்டும்
அரங்கிடை நூலறி வாளர்
அறியப் படாததொர் கூத்தும்
நிரந்த கெடிலப் புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்

அஞ்சுவ தியாதொன்று மில்லை
அஞ்ச வருவது மில்லை. 6

கொலைவரி வேங்கை அதளுங்
குலவோ டிலங்குபொற் றோடும்
விலைபெறு சங்கக் குழையும்
விலையில் கபாலக் கலனும்
மலைமகள் கைக்கொண்ட மார்பும்
மணியார்ந் திலங்கு மிடறும்
உலவு கெடிலப் புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்

அஞ்சுவ தியாதொன்று மில்லை
அஞ்ச வருவது மில்லை. 7

ஆடல் புரிந்த நிலையும்
அரையில் அசைத்த அரவும்
பாடல் பயின்ற பல்பூதம்
பல்லா யிரங்கொள் கருவி
நாடற் கரியதொர் கூத்தும்
நன்குயர் வீரட்டஞ் சூழ்ந்து
ஓடுங் கெடிலப் புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்

அஞ்சுவ தியாதொன்று மில்லை
அஞ்ச வருவது மில்லை. 8

சூழு மரவத் துகிலுந்
துகில்கிழி கோவணக் கீளும்
யாழின் மொழியவள் அஞ்ச
அஞ்சா தருவரை போன்ற
வேழ முரித்த நிலையும்
விரிபொழில் வீரட்டஞ் சூழ்ந்து
தாழுங் கெடிலப் புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்

அஞ்சுவ தியாதொன்று மில்லை
அஞ்ச வருவது மில்லை. 9

நரம்பெழு கைகள் பிடித்து
நங்கை நடுங்க மலையை
உரங்களெல் லாங்கொண் டெடுத்தான்
ஒன்பதும் ஒன்றும் அலற
வரங்கள் கொடுத்தருள் செய்வான்
வளர்பொழில் வீரட்டஞ் சூழ்ந்து
நிரம்பு கெடிலப் புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்

அஞ்சுவ தியாதொன்று மில்லை
அஞ்ச வருவது மில்லை.

இப்பதிகம் சமணர்களேவிய யானை அஞ்சும்படி ஓதி அருளியது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment