கொடுங்கண் வெண்டலை பாடல் வரிகள் (kotunkan ventalai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருநின்றியூர் தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருநின்றியூர்
சுவாமி : மகாலட்சுமீசர்
அம்பாள் : லோகநாயகி

கொடுங்கண் வெண்டலை

கொடுங்கண் வெண்டலை
கொண்டு குறைவிலைப்
படுங்க ணொன்றில
ராய்ப்பலி தேர்ந்துண்பர்
நெடுங்கண் மங்கைய
ராட்டயர் நின்றியூர்க்
கடுங்கைக் கூற்றுதைத்
திட்ட கருத்தரே. 1

வீதி வேல்நெடுங்
கண்ணியர் வெள்வளை
நீதி யேகொளப்
பாலது நின்றியூர்
வேத மோதி
விளங்குவெண் தோட்டராய்க்
காதில் வெண்குழை
வைத்தவெங் கள்வரே. 2

புற்றி னார்அர
வம்புலித் தோல்மிசைச்
சுற்றி னார்சுண்ணப்
போர்வைகொண் டார்சுடர்
நெற்றிக் கண்ணுடை
யாரமர் நின்றியூர்
பற்றி னாரைப்பற்
றாவினை பாவமே. 3

பறையின் ஓசையும்
பாடலின் ஓசையும்
மறையின் ஓசையும்
மல்கி அயலெலாம்
நிறையும் பூம்பொழில்
சூழ்திரு நின்றியூர்
உறையும் ஈசனை
உள்குமென் உள்ளமே. 4

சுனையுள் நீலஞ்
சுளியும் நெடுங்கணாள்
இனைய னென்றென்று
மேசுவ தென்கொலோ
நினையுந் தண்வயல்
சூழ்திரு நின்றியூர்ப்
பனையின் ஈருரி
போர்த்த பரமரே. 5

உரைப்பக் கேண்மின்நும்
உச்சியு ளான்றனை
நிரைப்பொன் மாமதில்
சூழ்திரு நின்றியூர்
உரைப்பொற் கற்றைய
ராரிவ ரோவெனிற்
திரைத்துப் பாடித்
திரிதருஞ் செல்வரே. 6

கன்றி யூர்முகில்
போலுங் கருங்களி
றின்றி ஏறல
னாலிது வென்கொலோ
நின்றி யூர்பதி
யாக நிலாயவன்
வென்றி யேறுடை
எங்கள் விகிர்தனே. 7

நிலையி லாவெள்ளை
மாலையன் நீண்டதோர்
கொலைவி லாலெயில்
எய்த கொடியவன்
நிலையி னார்வயல்
சூழ்திரு நின்றியூர்
உரையி னாற்றொழு
வார்வினை ஓயுமே. 8

அஞ்சி யாகிலும்
அன்புபட் டாகிலும்
நெஞ்சம் வாழி
நினைநின்றி யூரைநீ
இஞ்சி மாமதில்
எய்திமை யோர்தொழக்
குஞ்சி வான்பிறை
சூடிய கூத்தனே. 9

எளிய னாமொழி
யாஇலங் கைக்கிறை
களியி னாற்கயி
லாய மெடுத்தவன்
நெளிய வூன்ற
வலானமர் நின்றியூர்
அளியி னாற்றொழு
வார்வினை யல்குமே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment