கொன்று செய்த கொடுமை பாடல் வரிகள் (konru ceyta kotumai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கழுக்குன்றம் தலம் தொண்டைநாடு நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : தொண்டைநாடு
தலம் : திருக்கழுக்குன்றம்கொன்று செய்த கொடுமை

கொன்று செய்த கொடுமை
யாற்பல சொல்லவே
நின்ற பாவம்* வினைகள்
தாம்பல நீங்கவே
சென்று சென்று தொழுமின்
தேவர் பிரானிடங்
கன்றி னோடு பிடிசூழ்
தண்கழுக் குன்றமே.
( * பாவ வினைகள் என்றும் பாடம்) 1

இறங்கிச் சென்று தொழுமின்
இன்னிசை பாடியே
பிறங்கு கொன்றைச் சடையன்
எங்கள் பிரானிடம்
நிறங்கள் செய்த மணிகள்
நித்திலங் கொண்டிழி
கறங்கு வெள்ளை அருவித்
தண்கழுக் குன்றமே. 2

நீள நின்று தொழுமின்
நித்தலும் நீதியால்
ஆளும் நம்ம வினைகள்
அல்கி அழிந்திடத்
தோளும் எட்டும் உடைய
மாமணிச் சோதியான்
காள கண்டன் உறையுந்
தண்கழுக் குன்றமே. 3

வெளிறு தீரத் தொழுமின்
வெண்பொடி ஆடியை
முளிறி லங்குமழு வாளன்
முந்தி உறைவிடம்
பிளிறு தீரப் பெருங்கைப்
பெய்ம்மதம் மூன்றுடைக்
களிறி னோடு பிடிசூழ்
தண்கழுக் குன்றமே. 4

புலைகள் தீரத் தொழுமின்
புன்சடைப் புண்ணியன்
இலைகொள் சூலப் படையன்
எந்தை பிரானிடம்
முலைகள் உண்டு தழுவிக்
குட்டி யொடுமுசுக்
கலைகள் பாயும் புறவில்
தண்கழுக் குன்றமே. 5

மடமு டைய அடியார்
தம்மனத் தேஉற
விடமு டைய மிடறன்
விண்ணவர் மேலவன்
படமு டைய அரவன்
றான்பயி லும்மிடங்
கடமு டைய புறவில்
தண்கழுக் குன்றமே. 6

ஊன மில்லா அடியார்
தம்மனத் தேஉற
ஞான மூர்த்தி நட்ட
மாடிநவி லும்மிடந்
தேனும் வண்டும் மதுவுண்
டின்னிசை பாடியே
கான மஞ்ஞை உறையுந்
தண்கழுக் குன்றமே. 7

அந்த மில்லா அடியார்
தம்மனத் தேஉற
வந்து நாளும் வணங்கி
மாலொடு நான்முகன்
சிந்தை செய்த மலர்கள்
நித்தலுஞ் சேரவே
கந்தம் நாறும் புறவில்
தண்கழுக் குன்றமே. 8

பிழைகள் தீரத் தொழுமின்
பின்சடைப் பிஞ்ஞகன்
குழைகொள் காதன் குழகன்
றானுறை யும்மிடம்
மழைகள் சாலக் கலித்து
நீடுயர் வேயவை
குழைகொள் முத்தஞ் சொரியுந்
தண்கழுக் குன்றமே. 9

பல்லில் வெள்ளைத் தலையன்
றான்பயி லும்மிடம்
கல்லில் வெள்ளை அருவித்
தண்கழுக் குன்றினை
மல்லின் மல்கு திரள்தோள்
ஊரன் வனப்பினாற்
சொல்லல் சொல்லித் தொழுவா
ரைத்தொழு மின்களே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment