கோங்கமே குரவமே பாடல் வரிகள் (konkame kuravame) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் வடகுரங்காடுதுறை தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு வடகரை
தலம் : வடகுரங்காடுதுறை
அம்பாள் : சடைமுடியம்மை

கோங்கமே குரவமே

கோங்கமே குரவமே கொழுமலர்ப்
புன்னையே கொகுடிமுல்லை
வேங்கையே ஞாழலே விம்முபா
திரிகளே விரவியெங்கும்
ஓங்குமா காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறை
வீங்குநீர்ச் சடைமுடி அடிகளா
ரிடமென விரும்பினாரே. 1

மந்தமா யிழிமதக் களிற்றிள
மருப்பொடு பொருப்பின்நல்ல
சந்தமார் அகிலொடு சாதியின்
பலங்களுந் தகையமோதி
உந்துமா காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறை
எந்தையார் இணையடி இமையவர்
தொழுதெழும் இயல்பினாரே. 2

முத்துமா மணியொடு முழைவளர்
ஆரமும் முகந்துநுந்தி
எத்துமா காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறை
மத்தமா மலரொடு மதிபொதி
சடைமுடி யடிகள்தம்மேற்
சித்தமாம் அடியவர் சிவகதி
பெறுவது திண்ணமன்றே. 3

கறியுமா மிளகொடு கதலியின்
பலங்களுங் கலந்துநுந்தி
எறியுமா காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறை
மறியுலாங் கையினர் மலரடி
தொழுதெழ மருவுமுள்ளக்
குறியினா ரவர்மிகக் கூடுவார்
நீடுவா னுலகினூடே. 4

கோடிடைச் சொரிந்ததே னதனொடுங்
கொண்டல்வாய் விண்டமுன்னீர்
காடுடைப் பீலியுங் கடறுடைப்
பண்டமுங் கலந்துநுந்தி
ஓடுடைக் காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறை
பீடுடைச் சடைமுடி யடிகளா
ரிடமெனப் பேணினாரே. 5

கோலமா மலரொடு தூபமுஞ்
சாந்தமுங் கொண்டுபோற்றி
வாலியார் வழிபடப் பொருந்தினார்
திருந்துமாங் கனிகளுந்தி
ஆலுமா காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறை
நீலமா மணிமிடற் றடிகளை
நினையவல் வினைகள்வீடே. 6

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 7

நீலமா மணிநிறத் தரக்கனை
யிருபது கரத்தொடொல்க
வாலினாற் கட்டிய வாலியார்
வழிபட மன்னுகோயில்
ஏலமோ டிலையில வங்கமே
யிஞ்சியே மஞ்சளுந்தி
ஆலியா வருபுனல் வடகரை
யடைகுரங் காடுதுறையே. 8

பொருந்திறல் பெருங்கைமா வுரித்துமை
யஞ்சவே யொருங்குநோக்கிப்
பெருந்திறத் தனங்கனை அநங்கமா
விழித்ததும் பெருமைபோலும்
வருந்திறற் காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறை
அருந்திறத் திருவரை யல்லல்கண் டோ
ங்கிய அடிகளாரே. 9

கட்டமண் தேரருங் கடுக்கடின்
கழுக்களுங் கசிவொன்றில்லாப்
பிட்டர்தம் அறவுரை கொள்ளலும்
பெருவரைப் பண்டமுந்தி
எட்டுமா காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறைச்
சிட்டனா ரடிதொழச் சிவகதி
பெறுவது திண்ணமாமே. 10

தாழிளங் காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறைப்
போழிள மதிபொதி புரிதரு
சடைமுடிப் புண்ணியனைக்
காழியான் அருமறை ஞானசம்
பந்தன கருதுபாடல்
கோழையா அழைப்பினுங் கூடுவார்
நீடுவா னுலகினூடே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment