காடுடைச் சுடலை பாடல் வரிகள் (katutaic cutalai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவிடைமருதூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவிடைமருதூர்காடுடைச் சுடலை

காடுடைச் சுடலை நீற்றர்
கையில்வெண் டலையர் தையல்
பாடுடைப் பூதஞ் சூழப்
பரமனார் மருத வைப்பிற்
தோடுடைக் கைதை யோடு
சூழ்கிடங் கதனைச் சூழ்ந்த
ஏடுடைக் கமல வேலி
இடைமரு திடங்கொண் டாரே. 1

முந்தையார் முந்தி யுள்ளார்
மூவர்க்கு முதல்வ ரானார்
சந்தியார் சந்தி யுள்ளார்
தவநெறி தரித்து நின்றார்
சிந்தையார் சிந்தை யுள்ளார்
சிவநெறி யனைத்து மானார்
எந்தையார் எம்பி ரானார்
இடைமரு திடங் கொண்டாரே. 2

காருடைக் கொன்றை மாலை
கதிர்மணி அரவி னோடு
நீருடைச் சடையுள் வைத்த
நீதியார் நீதி யாய
போருடை விடையொன் றேற
வல்லவர் பொன்னித் தென்பால்
ஏருடைக் கமல மோங்கும்
இடைமரு திடங் கொண்டாரே. 3

விண்ணினார் விண்ணின் மிக்கார்
வேதங்கள் நான்கும் அங்கம்
பண்ணினார் பண்ணின் மிக்க
பாடலார் பாவந் தீர்க்குங்
கண்ணினார் கண்ணின் மிக்க
நுதலினார் காமற் காய்ந்த
எண்ணினார் எண்ணின் மிக்கார்
இடைமரு திடங் கொண்டாரே. 4

வேதங்கள் நான்குங் கொண்டு
விண்ணவர் பரவி ஏத்தப்
பூதங்கள் பாடி யாட
லுடையவன் புனிதன் எந்தை
பாதங்கள் பரவி நின்ற
பத்தர்கள் தங்கள் மேலை
ஏதங்கள் தீர நின்றார்
இடைமரு திடங் கொண்டாரே. 5

பொறியர வரையி லார்த்துப்
பூதங்கள் பலவுஞ் சூழ
முறிதரு வன்னி கொன்றை
முதிர்சடை மூழ்க வைத்து
மறிதரு கங்கை தங்க
வைத்தவர் எத்தி சையும்
ஏறிதரு புனல்கொள் வேலி
இடைமரு திடங் கொண்டாரே. 6

படரொளி சடையி னுள்ளாற்
பாய்புனல் அரவி னோடு
சுடரொளி மதியம் வைத்துத்
தூவொளி தோன்றும் எந்தை
அடரொளி விடையொன் றேற
வல்லவர் அன்பர் தங்கள்
இடரவை கெடவு நின்றார்
இடைமரு திடங் கொண்டாரே. 7

கமழ்தரு சடையி னுள்ளாற்
கடும்புனல் அரவி னோடு
தவழ்தரு மதியம் வைத்துத்
தன்னடி பலரும் ஏத்த
மழுவது வலங்கை யேந்தி
மாதொரு பாக மாகி
எழில்தரு பொழில்கள் சூழ்ந்த
இடைமரு திடங் கொண்டாரே. 8

பொன்றிகழ் கொன்றை மாலை
புதுப்புனல் வன்னி மத்தம்
மின்றிகழ் சடையில் வைத்து
மேதகத் தோன்று கின்ற
அன்றவர் அளக்க லாகா
அனலெரி யாகி நீண்டார்
இன்றுட னுலக மேத்த
இடைமரு திடங் கொண்டாரே. 9

மலையுடன் விரவி நின்று
மதியிலா அரக்கன் நூக்கத்
தலையுட னடர்த்து மீண்டே
தலைவனாய் அருள்கள் நல்கிச்
சிலையுடை மலையை வாங்கித்
திரிபுர மூன்றும் எய்தார்
இலையுடைக் கமல வேலி
இடைமரு திடங் கொண்டாரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது;

திருச்சிற்றம்பலம்

Leave a Comment