கண்ட பேச்சினிற் பாடல் வரிகள் (kanta peccinir) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கொண்டீச்சரம் – மணவாளம்பேட்டை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருக்கொண்டீச்சரம் – மணவாளம்பேட்டை
சுவாமி : பசுபதீச்ஸ்வரர்
அம்பாள் : சாந்தநாயகி

கண்ட பேச்சினிற்

கண்ட பேச்சினிற்
காளையர் தங்கள்பால்
மண்டி யேச்சுணு
மாதரைச் சேராதே
சண்டி யீச்சுர
வர்க்கருள் செய்தவக்
கொண்டி யீச்சுர
வன்கழல் கூறுமே. 1

சுற்ற முந்துணை
நன்மட வாளொடு
பெற்ற மக்களும்
பேண லொழிந்தனர்
குற்ற மில்புகழ்க்
கொண்டீச் சுரவனார்
பற்ற லாலொரு
பற்றுமற் றில்லையே. 2

மாடு தானது
வில்லெனின் மானிடர்
பாடு தான்செல்வா
ரில்லைபன் மாலையாற்
கூட நீர்சென்று
கொண்டீச் சுரவனைப்
பாடு மின்பர
லோகத் திருத்துமே. 3

தந்தை தாயொடு
தார மெனுந்தளைப்
பந்த மாங்கறுத்
துப்பயில் வெய்திய
கொந்த விழ்பொழிற்
கொண்டீச் சுரவனைச்
சிந்தை செய்ம்மின்
அவனடி சேரவே. 4

கேளு மின்னிள
மையது கேடுவந்
தீளை யோடிரு
மல்லது வெய்தன்முன்
கோள ராவணி
கொண்டீச் சுரவனை
நாளு மேத்தித்
தொழுமின்நன் காகுமே. 5

வெம்பு நோயும்
இடரும் வெறுமையும்
துன்ப முந்துய
ரும்மெனுஞ் சூழ்வினை
கொம்ப னார்பயில்
கொண்டீச் சுரவனை
எம்பி ரானென
வல்லவர்க் கில்லையே. 6

அல்ல லோடரு
நோயில் அழுந்திநீர்
செல்லு மாநினை
யாதே கனைகுரற்
கொல்லை யேறுடைக்
கொண்டீச் சுரவனை
வல்ல வாறு
தொழவினை மாயுமே. 7

நாறு சாந்தணி
நன்முலை மென்மொழி
மாறி லாமலை
மங்கையொர் பாகமாக்
கூற னாருறை
கொண்டீச் சுரநினைந்
தூறு வார்தமக்
கூனமொன் றில்லையே. 8

அயிலார் அம்பெரி
மேருவில் லாகவே
எயிலா ரும்பொடி
யாய்விழ எய்தவன்
குயிலா ரும்பொழிற்
கொண்டீச் சுரவனைப்
பயில்வா ரும்பெரு
மைபெறும் பாலரே. 9

நிலையி னார்வரை
நின்றெடுத் தான்றனை
மலையி னாலடர்த்
துவிறல் வாட்டினான்
குலையி னார்பொழிற்
கொண்டீச் சுரவனைத்
தலையி னால்வணங்
கத்தவ மாகுமே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment