எத்தாயர் எத்தந்தை பாடல் வரிகள் (ettayar ettantai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவானைக்கா – திருவானைக்கோவில் தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருவானைக்கா – திருவானைக்கோவில்எத்தாயர் எத்தந்தை

எத்தாயர் எத்தந்தை எச்சுற் றத்தார்
எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்
செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை
சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்
சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித்
திருவானைக் காவுடைய செல்வா என்றன்
அத்தாவுன் பொற்பாத மடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. 1

ஊனாகி உயிராகி யதனுள் நின்ற
உணர்வாகிப் பிறவனைத்தும் நீயாய் நின்றாய்
நானேதும் அறியாமே யென்னுள் வந்து
நல்லனவுந் தீயனவுங் காட்டா நின்றாய்
தேனாருங் கொன்றையனே நின்றி யூராய்
திருவானைக் காவிலுறை சிவனே ஞானம்
ஆனாயுன் பொற்பாத மடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. 2

ஒப்பாயிவ் வுலகத்தோ டொட்டி வாழ்வான்
ஒன்றலாத் தவத்தாரோ டுடனே நின்று
துப்பாருங் குறையடிசில் துற்றி நற்றுன்
திறமறந்து திரிவேனைக் காத்து நீவந்
தெப்பாலும் நுண்ணுணர்வே யாக்கி யென்னை
ஆண்டவனே எழிலானைக் காவா வானோர்
அப்பாவுன் பொற்பாத மடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. 3

நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்சக் கள்வா
நிறைமதியஞ் சடைவைத்தாய் அடையா துன்பால்
முனைத்தவர்கள் புரமூன்று மெரியச் செற்றாய்
முன்னானைத் தோல்போர்த்த முதல்வா வென்றுங்
கனைத்துவரும் எருதேறுங் காள கண்டா
கயிலாய மலையாநின் கழலே சேர்ந்தேன்
அனைத்துலகும் ஆள்வானே ஆனைக் காவா
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. 4

இம்மாயப் பிறப்பென்னுங் கடலாந் துன்பத்
திடைச்சுழிப்பட் டிளைப்பேனை இளையா வண்ணங்
கைம்மான மனத்துதவிக் கருணை செய்து
காதலரு ளவைவைத்தாய் காண நில்லாய்
வெம்மான மதகரியி னுரிவை போர்த்த
வேதியனே தென்னானைக் காவுள் மேய
அம்மான்நின் பொற்பாத மடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. 5

உரையாரும் புகழானே ஒற்றி யூராய்
கச்சியே கம்பனே காரோ ணத்தாய்
விரையாரும் மலர்தூவி வணங்கு வார்பால்
மிக்கானே அக்கரவம் ஆரம் பூண்டாய்
திரையாரும் புனற்பொன்னித் தீர்த்த மல்கு
திருவானைக் காவிலுறை தேனே வானோர்
அரையாவுன் பொற்பாத மடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. 6

மையாரும் மணிமிடற்றாய் மாதோர் கூறாய்
மான்மறியு மாமழுவும் அனலு மேந்துங்
கையானே காலனுடல் மாளச் செற்ற
கங்காளா முன்கோளும் விளைவு மானாய்
செய்யானே திருமேனி யரியாய் தேவர்
குலக்கொழுந்தே தென்னானைக் காவுள் மேய
ஐயாவுன் பொற்பாத மடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. 7

இலையாருஞ் சூலத்தாய் எண்தோ ளானே
எவ்விடத்தும் நீயல்லா தில்லை யென்று
தலையாரக் கும்பிடுவார் தன்மை யானே
தழல்மடுத்த மாமேரு கையில் வைத்த
சிலையானே திருவானைக் காவுள் மேய
தீயாடீ சிறுநோயால் நலிவுண் டுள்ளம்
அலையாதே நின்னடியே அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. 8

விண்ணாரும் புனல்பொதிசெஞ் சடையாய் வேத
நெறியானே எறிகடலின் நஞ்ச முண்டாய்
எண்ணாரும் புகழானே உன்னை யெம்மான்
என்றென்றே நாவினிலெப் பொழுதும் உன்னிக்
கண்ணாரக் கண்டிருக்கக் களித்தெப் போதுங்
கடிபொழில்சூழ் தென்னானைக் காவுள் மேய
அண்ணாநின் பொற்பாத மடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. 9

கொடியேயும் வெள்ளேற்றாய் கூளி பாடக்
குறட்பூதங் கூத்தாட நீயு மாடி
வடிவேயும் மங்கைதனை வைத்த மைந்தா
மதிலானைக் காவுளாய் மாகா ளத்தாய்
படியேயுங் கடலிலங்கைக் கோமான் றன்னைப்
பருமுடியுந் திரள்தோளு மடர்த்து கந்த
அடியேவந் தடைந்தடிமை யாகப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment