எனக்கினித் தினைத்தனைப் பாடல் வரிகள் (enakkinit tinaittanaip) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவலம்புரம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவலம்புரம்எனக்கினித் தினைத்தனைப்

எனக்கினித் தினைத்தனைப்
புகலிடம் அறிந்தேன்
பனைக்கனிப் பழம்படும்
பரவையின் கரைமேல்
எனக்கினி யவன்தமர்க்
கினியவன் எழுமையும்
மனக்கினி யவன்றன
திடம்வலம் புரமே. 1

புரமவை எரிதர
வளைந்தவில் லினன்அவன்
மரவுரி புலியதள்
அரைமிசை மருவினன்
அரவுரி இரந்தவன்
இரந்துண விரும்பிநின்
றிரவெரி யாடிதன்
இடம்வலம் புரமே. 2

நீறணி மேனியன்
நெருப்புமிழ் அரவினன்
கூறணி கொடுமழு
ஏந்தியோர் கையினன்
ஆறணி அவிர்சடை
அழல்வளர் மழலைவெள்
ளேறணி அடிகள்தம்
இடம்வலம் புரமே. 3

கொங்கணை சுரும்புண
நெருங்கிய குளிரிளந்
தெங்கொடு பனைபழம்
படுமிடந் தேவர்கள்
தங்கிடும் இடந்தடங்
கடற்றிரை புடைதர
எங்கள தடிகள்நல்
இடம்வலம் புரமே. 4

கொடுமழு விரகினன்
கொலைமலி சிலையினன்
நெடுமதில் சிறுமையின்
நிரவவல் லவனிடம்
படுமணி முத்தமும்
பவளமும் மிகச்சுமந்
திடுமணல் அடைகரை
இடம்வலம் புரமே. 5

கருங்கடக் களிற்றுரிக்
கடவுள திடங்கயல்
நெருங்கிய நெடும்பெணை
அடும்பொடு விரவிய
மருங்கொடு வலம்புரி
சலஞ்சலம் மணம்புணர்ந்
திருங்கடல் அணைகரை
இடம்வலம் புரமே. 6

நரிபுரி காடரங்
காநடம் ஆடுவர்
வரிபுரி பாடநின்
றாடும்எம் மான்இடம்
புரிசுரி வரிகுழல்
அரிவையோர் பால்மகிழ்ந்
தெரியெரி யாடிதன்
இடம்வலம் புரமே. 7

பாறணி முடைதலை
கலனென மருவிய
நீறணி நிமிர்சடை
முடியினன் நிலவிய
மாறணி வருதிரை
வயலணி பொழிலது
ஏறுடை அடிகள்தம்
இடம்வலம் புரமே. 8

சடசட விடுபெணை
பழம்படும் இடவகை
படவட கத்தொடு
பலிகலந் துலவிய
கடைகடை பலிதிரி
கபாலிதன் இடமது
இடிகரை மணலடை
இடம்வலம் புரமே. 9

குண்டிகைப் படப்பினில்
விடக்கினை ஒழித்தவர்
கண்டவர் கண்டடி
வீழ்ந்தவர் கனைகழல்
தண்டுடைத் தண்டிதன்
இனமுடை அரவுடன்
எண்டிசைக் கொருசுடர்
இடம்வலம் புரமே. 10

வருங்கல மும்பல
பேணுதல் கருங்கடல்
இருங்குலப் பிறப்பர்தம்
இடம்வலம் புரத்தினை
அருங்குலத் தருந்தமிழ்
ஊரன்வன் றொண்டன்சொல்
பெருங்குலத் தவரொடு
பிதற்றுதல் பெருமையே. 11

திருச்சிற்றம்பலம்

Leave a Comment