அரியும் நம்வினை பாடல் வரிகள் (ariyum namvinai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் கரவீரம் – வடகண்டம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : கரவீரம் – வடகண்டம்
சுவாமி : கரவீரேஸ்வரர்
அம்பாள் : பிரத்யக்ஷமின்னம்மை

அரியும் நம்வினை

அரியும் நம்வினை யுள்ளன ஆசற
வரிகொள் மாமணி போற்கண்டம்
கரிய வன்திக ழுங்கர வீரத்தெம்
பெரிய வன்கழல் பேணவே. 1

தங்கு மோவினை தாழ்சடை மேலவன்
திங்க ளோடுடன் சூடிய
கங்கை யான்திக ழுங்கர வீரத்தெம்
சங்க ரன்கழல் சாரவே. 2

ஏதம் வந்தடை யாஇனி நல்லன
பூதம் பல்படை யாக்கிய
காத லான்திக ழுங்கர வீரத்தெம்
நாதன் பாதம் நணுகவே. 3

பறையும் நம்வினை யுள்ளன பாழ்பட
மறையும் மாமணி போற்கண்டம்
கறைய வன்திக ழுங்கர வீரத்தெம்
இறைய வன்கழல் ஏத்தவே. 4

பண்ணி னார்மறை பாடலன் ஆடலன்
விண்ணி னார்மதி லெய்தமுக்
கண்ணி னான்உறை யுங்கர வீரத்தைத்
நண்ணு வார்வினை நாசமே. 5

நிழலி னார்மதி சூடிய நீள்சடை1
அழலி னாரழ லேந்திய
கழலி னாருறை யுங்கர வீரத்தைத்
தொழவல் லார்க்கில்லை துக்கமே.

பாடம் : 1 சூடினன் நீள்சடை 6

வண்டர் மும்மதில் மாய்தர எய்தவன்
அண்டன் ஆரழல் போலொளிர்
கண்ட னாருறை யுங்கர வீரத்துத்
தொண்டர் மேல்துயர் தூரமே. 7

புனலி லங்கையர் கோன்முடி பத்திறச்
சினவ லாண்மை செகுத்தவன்
கனல வன்னுறை கின்ற கரவீரம்
எனவல் லார்க்கிட ரில்லையே. 8

வெள்ளத் தாமரை யானொடு மாலுமாய்த்
தெள்ளத் தீத்திர ளாகிய
கள்ளத் தான்உறை யுங்கர வீரத்தை
உள்ளத் தான்வினை ஓயுமே. 9

செடிஅ மண்ணொடு சீவரத் தாரவர்
கொடிய வெவ்வுரை கொள்ளேன்மின்2
கடிய வன்னுறை கின்ற கரவீரத்
தடிய வர்க்கில்லை யல்லலே.

பாடம் : 2 கொள்ளன்மின் 10

வீடி லான்விளங் குங்கர வீரத்தெம்
சேடன் மேற்கசி வால்தமிழ்
நாடு ஞானசம் பந்தன சொல்லிவை
பாடு வார்க்கில்லை பாவமே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment