அரனை உள்குவீர் – திருவிருக்குக்குறள் பாடல் வரிகள் (aranai ulkuvir – tiruvirukkukkural) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்பிரமபுரம் – சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருப்பிரமபுரம் – சீர்காழி
சுவாமி : பிரமபுரீஸ்வரர்
அம்பாள் : திருநிலைநாயகி

அரனை உள்குவீர் – திருவிருக்குக்குறள்

அரனை உள்குவீர், பிரம னூருளெம்
பரனை யேமனம், பரவி உய்ம்மினே. 1

காண உள்குவீர், வேணு நற்புரத்
தாணு வின்கழல், பேணி உய்ம்மினே. 2

நாதன் என்பிர்காள், காதல் ஒண்புகல்
ஆதி பாதமே, ஓதி உய்ம்மினே. 3

அங்கம் மாதுசேர், பங்கம் ஆயவன்
வெங்குரு மன்னும், எங்க ளீசனே. 4

வாணி லாச்சடைத், தோணி வண்புரத்
தாணி நற்பொனைக், காணு மின்களே. 5

பாந்த ளார்சடைப், பூந்த ராய்மன்னும்
ஏந்து கொங்கையாள், வேந்த னென்பரே. 6

கரிய கண்டனைச், சிரபு ரத்துளெம்
அரசை நாடொறும், பரவி உய்ம்மினே. 7

நறவம் ஆர்பொழிற், புறவ நற்பதி
இறைவன் நாமமே, மறவல் நெஞ்சமே. 8

தென்றில் அரக்கனைக், குன்றிற் சண்பைமன்
அன்று நெரித்தவா, நின்றுநினைமினே. 9

அயனும் மாலுமாய், முயலுங் காழியான்
பெயல்வை யெய்திநின், றியலும் உள்ளமே. 10

தேரர் அமணரைச், சேர்வில் கொச்சைமன்
நேரில் கழல்நினைந், தோரும் உள்ளமே. 11

தொழும னத்தவர், கழும லத்துறை
பழுதில் சம்பந்தன், மொழிகள் பத்துமே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment