அந்தியும் நண்பகலும் அஞ்சுப பாடல் வரிகள் (antiyum nanpakalum ancupa) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவாரூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவாரூர்அந்தியும் நண்பகலும் அஞ்சுப
அந்தியும் நண்பகலும்
அஞ்சுப தஞ்சொல்லி
முந்தி எழும்பழைய
வல்வினை மூடாமுன்
சிந்தை பராமரியாத்
தென்றிரு வாரூர்புக்
கெந்தை பிரானாரை
யென்றுகொல் எய்துவதே. 1
நின்ற வினைக்கொடுமை
நீங்க இருபொழுதுந்
துன்று மலரிட்டுச்
சூழும் வலஞ்செய்து
தென்றல் மணங்கமழுந்
தென்றிரு வாரூர்புக்
கென்றன் மனங்குளிர
என்றுகொல் எய்துவதே. 2
முன்னை முதற்பிறவி
மூதறி யாமையினாற்
பின்னை நினைந்தனவும்
பேதுற வும்மொழியச்
செந்நெல் வயற்கழனித்
தென்றிரு வாரூர்புக்
கென்னுயிர்க் கின்னமுதை
என்றுகொல் எய்துவதே. 3
நல்ல நினைப்பொழிய
நாள்களில் ஆருயிரைக்
கொல்ல நினைப்பனவுங்
குற்றமும் அற்றொழியச்
செல்வ வயற்கழனித்
தென்றிரு வாரூர்புக்
கெல்லை மிதித்தடியேன்
என்றுகொல் எய்துவதே. 4
கடுவரி மாக்கடலுட்
காய்ந்தவன் தாதையைமுன்
சுடுபொடி மெய்க்கணிந்த
சோதியை வன்றலைவாய்
அடுபுலி ஆடையனை
ஆதியை ஆரூர்புக்
கிடுபலி கொள்ளியைநான்
என்றுகொல் எய்துவதே. 5
சூழொளி நீர்நிலந்தீத்
தாழ்வளி ஆகாசம்
வானுயர் வெங்கதிரோன்
வண்டமிழ் வல்லவர்கள்
ஏழிசை ஏழ்நரம்பின்
ஓசையை ஆரூர்புக்
கேழுல காளியைநான்
என்றுகொல் எய்துவதே. 6
கொம்பன நுண்ணிடையாள்
கூறனை நீறணிந்த
வம்பனை எவ்வுயிர்க்கும்
வைப்பினை ஒப்பமராச்
செம்பொனை நன்மணியைத்
தென்றிரு வாரூர்புக்
கென்பொனை என்மணியை
என்றுகொல் எய்துவதே. 7
ஆறணி நீண்முடிமேல்
ஆடர வஞ்சூடிப்
பாறணி வெண்டலையிற்
பிச்சைகொள் நச்சரவன்
சேறணி தண்கழனித்
தென்றிரு வாரூர்புக்
கேறணி எம்மிறையை
என்றுகொல் எய்துவதே. 8
மண்ணினை உண்டுமிழ்ந்த
மாயனும் மாமலர்மேல்
அண்ணலும் நண்ணரிய
ஆதியை மாதினொடுந்
திண்ணிய மாமதில்சூழ்
தென்றிரு வாரூர்புக்
கெண்ணிய கண்குளிர
என்றுகொல் எய்துவதே. 9
மின்னெடுஞ் செஞ்சடையான்
மேவிய ஆரூரை
நன்னெடுங் காதன்மையால்
நாவலர் கோன்ஊரன்
பன்னெடுஞ் சொல்மலர்கொண்
டிட்டன பத்தும்வல்லார்
பொன்னுடை விண்ணுலகம்
நண்ணுவர் புண்ணியரே. 10
திருச்சிற்றம்பலம்