Anandha Maalai Thiruvasagam Lyrics

ஆனந்தமாலை (Anandha Maalai Thiruvasagam Lyrics)

அருளியவர் : மாணிக்கவாசகர்
தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு : சோழநாடு காவிரி வடகரை

சிறப்பு: சிவானுபவ விருப்பம்; அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

திருச்சிற்றம்பலம்

மின்னே ரனைய பூங்கழல்கள் அடைந்தார் கடந்தார் வியனுலகம்
பொன்னே ரனைய மலர்கொண்டு போற்றா நின்றார் அமரரெல்லாம்
கல் நேரனைய மனக்கடையாய்க் கழிப்புண் டவலக் கடல்வீழ்ந்த
என்னே ரனையேன் இனியுன்னைக் கூடும் வண்ணம் இயம்பாயே 1

என்னால் அறியாப் பதம்தந்தாய் யான தறியா தேகெட்டேன்
உன்னால் ஒன்றுங் குறைவில்லை உடையாய் அடிமைக் காரென்பேன்
பன்னாள் உன்னைப் பணிந்தேத்தும் பழைய அடியா ரொடுங்கூடா
தென்நா யகமே பிற்பட்டிங் கிருந்தென் நோய்க்கு விருந்தாயே. 2

சீல மின்றி நோன்பின்றிச் செறிவே யின்றி அறிவின்றித்
தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனை
மாலுங் காட்டி வழிகாட்டி வாரா உலக நெறியேறக்
கோலங் காட்டி ஆண்டானைக் கொடியேன் என்றோ கூடுவதே. 3

கெடுவென் கெடுமா கெடுகின்றேன் கேடி லாதாய் பழிகொண்டாய்
படுவேன் படுவ தெல்லாம்நான் பட்டாற் பின்னைப் பயனென்னே
கொடுமா நரகத் தழுந்தாமே காத்தாட் கொள்ளுங் குருமணியே
நடுவாய் நில்லா தொழிந்தக்கால் நன்றோ எங்கள் நாயகமே. 4

தாயாய் முலையைத் தருவானே தாரா தொழிந்தாற் சவலையாய்
நாயேன் கழிந்து போவேனோ நம்பி யினித்தான் நல்குதியே
தாயே யென்றுன் தாளடைந்தேன் தயாநீ என்பால் இல்லையே
நாயேன் அடிமை உடனாக ஆண்டாய் நான்தான் வேண்டாவோ. 5

கோவே யருள வேண்டாவோ கொடியேன் கெடவே அமையுமே
ஆவா வென்னா விடிலென்னை அஞ்சேல் என்பார் ஆரோதான்
சாவா ரெல்லாம் என்னளவோ தக்க வாறன் றென்னாரோ
தேவே தில்லை நடமாடீ திகைத்தேன் இனித்தான் தேற்றாயே. 6

நரியைக் குதிரைப் பரியாக்கி ஞால மெல்லாம் நிகழ்வித்துப்
பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்ச தேற்றும் பெருந்துறையாய்
அரிய பொருளே அவிநாசி அப்பா பாண்டி வெள்ளமே
தெரிய அரிய பரஞ்சோதி செய்வ தொன்றும் அறியேனே. 7

Leave a Comment