Nava Durga Thuthi Lyrics Tamil | Nava Durga Thuthi Paadalgal இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் நவ துர்கா துதி பாடல் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

சுகுண மனோஹரி சுந்தரன் நாயகி சீவனைக் காத்திடும் தேவியளே

புவனங்கள் யாவையும் படைத்திடச் சிவனைத் தேடியே கலந்திடும் உமையவளே

மோஹனப்புன்னகை வீசிடும் முகத்தினில் மூக்குத்தி ஜொலித்திடத் திகழ்பவளே

வாவென அழைத்திடும் பக்தரைக் கண்டிடப் பாகென உருகிடும் துர்க்கையளே!

ஹிமவான் மகளாய் மலையினில் பிறந்து ஷைலபுத்ரியென அருள்பவளே

சிவனை அடைந்திடக் கடுந்தவம்செய்து சிவமும் அசைந்திடச் செய்தவளே

மூலாதாரத்தில் உன்னிடும் பக்தரை மேலேகொண்டு செல்பவளே

நவநாயகியரில் முதல்நாளின்று மஹாஷைலபுத்ரி தாள் பணிந்தேன்!

============

பிரம்மசாரிணி மாதா

பிரமனின்மகனாம் தக்ஷனின்மகளாய்ச் சிவனை மணம்செய்து கொண்டவளே

சிவனைமதியாச் சிறுமதியோனைச் சீற்றம்பொங்கிடப் பார்த்தவளே

சொல்மதிகேளா தக்ஷனைச் சபித்துத் தீயினில் மறைந்த தூயவளே

ஹிமவான் மகளாய் மலைமடி தவழ்ந்த பேரெழில்கொண்ட துர்க்கையளே!

பிரஹ்மசாரிணியாய்க் கடுந்தவம்புரிந்து சிவனை அசைத்திட்ட தாயவளே

ஸ்வாதிஷ்ட்டானத்தில் இருந்திடும் அடியவர் வேண்டியநல்கும் மாயவளே

தைரியம்,வீரம் அறிவினில்தெளிவு அனைத்துக்கும் நீயே காரணியே

நவநாயகியரில் இரண்டாம்நாளின்று ப்ரஹ்மச்சாரிணியின் தாள் பணிந்தேன்!

============

சந்த்ரகண்டா மாதா

கொடுமைகள் புரிந்த அரக்கரைவென்றிட அமரர்கள் துதிக்க மகிழ்ந்தவளே

மாயையின் ஆணையால் மாதுயில் கொண்ட மாதவனை அன்று எழுப்பியவளே

மதுகை டபவதம் செய்திடவெண்ணி மஹா மாயையாய்த் திகழ்ந்தவளே

மன்னுயிர் போற்றிட விண்ணவர் வாழ்த்திட வெற்றியைக் கொடுத்திட்ட துர்க்கையளே!

மணிபோல் விளங்கும் சந்திரவடிவை நுதலில்கொண்ட சந்திரகண்டாஅன்னையளே

வில்லும் அம்பும் சூலமும் வாளும் கதையும் ஐங்கரம்கொண்ட தசக்கரளே

ஜெபமாலையுடன் தாமரை கமண்டலம் முக்கரம்கொண்டு அபயமும் அருளும் முக்கண்ணளே

நவநாயகியரில் மூன்றாம்நாளின்று சந்திரகண்டாமாதா தாள் பணிந்தேன்!

============

கூஷ்மாண்டா தேவி

காரிருள்சூழ்ந்த அண்டத்துள்ளிருந்து பேரருள் கொண்ட திருமகளே

அண்டத்தைப் பிளந்து பிண்டத்தை அளித்து உலகினைப் படைத்திட்டப் பரம்பொருளே

பொன்னிறமேனியில் துலங்கிடும் முகவருள் கொண்டெனைக் காக்கும் தூயவளே

அண்டசராசரம் அனைத்துக்கும்காரணி ஆகியகோளமாம் துர்க்கையளே!

கூஷ்மாண்டா எனும் பெயரினைக் கொண்டு சிம்மத்தின் மீது அமர்பவளே

வில்லும் அம்பும் கதையும் சக்ரமும் நான்குகைகளினில் கொண்டவளே

கமலமும் மாலையும் கமண்டலமும்கொண்டு அமிர்தகலசம் கொள்ளும் அஷ்டபுஜளே

நவநாயகியரில் நான்காம்நாளின்று கூஷ்மாண்டாவின் தாள் பணிந்தேன்!

============

ஸ்கந்த மாதா

பக்திசெய்தேவர் துயர்தீர்த்திடவே பரமனைவேண்டிடச் செய்தவளே

சிவனின் தீப்பொறி ஆறையும் ஆற்றினில் ஒன்றாய்ச் சேர்த்திட்ட தாயவளே

அன்புடன் அணைத்து அறுமுகனையொரு முருகனாய்க் கொண்ட உமையவளே

வீணரை வென்றிட சேயினைப்பணித்து வேலினைத்தந்திட்ட துர்க்கையளே!

ஸ்கந்தமாதாவெனச் சிம்மத்திலமர்ந்து குமரனைமடியினில் கொண்டவளே

மேல்வலக்கையினில் குமரனைக் கொண்டு மேலிடக்கையினால் அருள்பவளே

மற்றிருகைகளில் தாமலைமலரினைத் தாங்கியே அருள்தரும் சதுர்புஜளே

நவநாயகியரில் ஐந்தாம்நாளின்று ஸ்கந்தமாதாவின் தாள் பணிந்தேன்!

============

காத்யாயனி மாதா

மாயாவுலகினில் மக்களைக் காத்திட மகிழ்வுடன் அருளிடும் மலைமகளே

ஓயாவுலகினில் நீயே இரங்கி மகளாய்ப் பிறந்திட வந்தவளே

தாயே தனக்கு மகளாய் வந்திடத் தவம்புரிந்தவர்க்கு அருளியவளே

காத்யாயனர்க்கு மகளாய்ப் பிறந்து காட்டினில் வாழ்ந்திட்ட துர்க்கையளே!

காத்யாயனியாய் மஹிஷனை அழித்திடக் கருணைகொண்டிட்ட வனமகளே

வாளும் கமலமும் இடக்கரம் தாங்கி சிம்மத்தில் அமர்ந்திடும் சூலியளே

அபயமும் அருளும் வலக்கரம் தாங்கி மூவரும் போற்றப்போர் புரிந்தவளே!

நவநாயகியரில் ஆறாம்நாளின்று காத்யாயனியின் தாள் பணிந்தேன்!

============

காலராத்ரி மாதா

கோரபயங்கரி கரியநிறத்தினி கண்டவர்நடுங்கிடும் காளியளே

தலைவிரிகோலமாய்க் கழுதையிலேறிக் கொடியரை விரட்டிடும் சூலியளே

கண்களைப் பறித்திடும் மின்னொளிவிளங்கிடும் மாலையைக்கழுத்தினில் அணிந்தவளே

விண்ணுயர்நின்று வீணரைச் சாய்த்திட வேகமாய் வந்திடும் துர்க்கையளே!

காலராத்ரியெனும் பெயரினைக் கொண்டு காலத்தை வென்றிட்ட மாயவளே

முட்கதை, கத்தியை இடக்கைகள் கொண்டு அருளும் அபயமும் அளிப்பவளே

வெளிவிடும் மூச்சினில் தீச்சுவாலையுடன் கழுதையில் வலம்வரும் முக்கண்ணளே

நவநாயகியரில் ஏழாம்நாளின்று மஹாகாலராத்ரி தாள் பணிந்தேன்!

============

மஹாகௌரி மாதா

சிவனைச்சேர்ந்திடச் சீரியதவம்செய்து ஊசிமுனையினில் நின்றவளே

தவத்தினில் மகிழ்ந்திட்ட சிவனைக் கண்டு களிப்புடன் சென்றே அணைத்தவளே

சிவனே நடுங்கிடும் கரியவுருவினை மேனியில்கொண்டு எழுந்தவளே

கங்கையின் புனிதம் கருநிறம்கரைத்திட பூரணவொளியான துர்க்கையளே!

எருதுமேலமர்ந்து சூலம் டமரு கைகளிலேந்தி வெண்ணிற ஆடை உடுத்தவளே

என்றுமிளமையாய் எட்டுவயதினளாய் இன்னல்கள் தீர்த்திடும் தூயவளே

அசுரரை அழித்திட அனைவர்க்கும் அருளிய அஷ்டமஹாதேவி துர்க்கையளே

நவநாயகியரில் எட்டாம்நாளின்று மஹாகௌரிமாதா தாள் பணிந்தேன்!

============

சித்திதாத்ரி தேவி

சுந்தரி சங்கரி சுலப சந்தோஷிணி சுரமுனி பணிந்திடும் சூலியளே

அசுரரை மாய்த்து ஆணவம் தொலைத்து அடியரைக் காத்திடும் அன்னையளே

அணிமா,மஹிமா,கரிமா,லகிமா,ப்ரபத்தி,ப்ரகாம்யா,ஈசித்வ, விசித்வா ஆனவளே

அட்டமாசித்தியை சிவனில் பாதியாய்ச் சேர்ந்தே வழங்கிடும் துர்க்கையளே!

ஸித்திதாத்ரி எனப் பெருமைபெற்றிடும் பேரெழில் கொண்ட தேவியளே

தாமரைமலர்மேல் சிம்மத்தில் அமர்ந்து அருள்மழைபொழியும் புண்ணியளே

சங்கொடு சக்கரம் கதையும் கமலமும் கைகளில் தாங்கிடும் சதுர்புஜளே

நவநாயகியரில் ஒன்பதாம்நாளின்று ஸித்திதாத்ரிதேவி தாள் பணிந்தேன்!

============

ஸ்ரீ மஹா துர்கா

நவராத்ரி நாளினில் நாயகிஉன்புகழ் பாடியே நாடிடும் அடியவர்க்கு

நவநவமாய்ப் பல இன்பங்கள் அளித்து நாளும் நன்மையே புரிபவளே

நவநாயகியாய் நானிலம் தழைத்திட நல்லருள் புரிந்திட வந்தவளே

நவசக்தி ரூபமாய் நல்லோரைக் காத்து நாதரூபமான துர்க்கையளே!

நவரசம் ததும்பிடும் நன்முகம் கொண்டிங்கு நாளும் என்னுடன் நிற்பவளே

நவரத்ன ஜோதியாய் நெஞ்சினில் நிறுத்திடும் அடியவருயர்ந்திடச் செய்பவளே

நவராத்திரியில் கொலுவினிலமர்ந்து நன்மைகள் புரிந்திட வருபவளே

நவநாயகியர் நற்றமிழ்மாலை பாடியே துர்க்கையின் தாள் பணிந்தேன்!

நாயகியை மனதில்வைத்துப் போற்றிவரும் இம்மாலையில்

சொற்குற்றம் பொருட்குற்றம் அத்தனையும் நீ பொறுத்து

நாடிவரும் அடியவர்க்கு நல்லருளை வழங்கிடவே

அன்னையுன்றன் அடிபணிந்தேன் தாழ்ந்து.

இந்த | nava durga thuthi lyrics tamil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Durga Devi Songs, துர்கா தேவி பாடல்கள் நவ துர்கா துதி பாடல் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment