Monday, December 8, 2025
HomeAmman Songsஸ்ரீ லலிதா நவரத்தின மாலை பாடல் | Sri Lalitha Navarathna Malai Lyrics Tamil

ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை பாடல் | Sri Lalitha Navarathna Malai Lyrics Tamil

ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை பாடல்

நவரத்தினங்களான, வைரம், நீலம், முத்து, பவளம், மாணிக்கம், மரகதம், கோமேதகம், பத்மராகம் (புஷ்பராகம்), வைடூரியம் முதலியவற்றைக் குறிக்கும் சொற்களின் மூலம் அம்பிகையைத் துதிப்பதாக அமைந்துள்ள பாடல் இது. இதைப் பாடுவோர், அம்பிகையின் கருணையால் சிவரத்தினமாய்த் திகழ்வார் என்று நூற்பயன் கூறுகிறது. அன்னை ஸ்ரீ லலிதாம்பிகையைப் போற்றித் துதிக்கும் அற்புதப் பாடல்களுள் ஒன்று ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை பாடல் வரிகள் (Sri Lalitha Navarathna Malai Lyrics) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது .

காப்பு
ஆக்கும் தொழில் ஐந்து அரன் ஆற்ற நலம்பூக்கும்
நகையாள் புவனேஸ்வரி போல் சேர்க்கும் நவரத்தின
மாலையினைக் காக்கும் கண நாயக வாரணமே!

வைரம்
கற்றும் தெளியார் காடே கதியாய்கண்மூடி நெடுங்கன வானதவம்
பெற்றும் தெரியார் நிலை எண்ணில் அவம் பெருகும் பிழையேன் பேசத் தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்பகைவர்க்கு எமனாக எடுத்தவளே
வற்றாத அருள் கணையே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (1)

நீலம்
மூலக் கனலே சரணம் சரணம்முடியா முதலே சரணம் சரணம்
கோல கிளியே சரணம் சரணம் குன்றாத ஒளிக் குவையே சரணம்
நீலத் திருமேனியிலே நினைவாய் நினைவற்று எளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக் குமரீ வருவாய் வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (2)

முத்து
முத்தேவரும் முத்தொழில் ஆற்றிடவே முன்னின்று அருளும் முதல்வி சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம் வேதாந்த நிவாஸினியே சரணம்
தத்தேறிய நான் தநயன் தாய் நீ சாகாத வரம் தரவே வருவாய்
மத்தே றுததிக் கிணை வாழ்வு உடையேன் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (3)

பவளம்
அந்தி மயங்கிய வான விதானம் அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிறம் பவளம் பொழி பாரோர் தேன் பொழிலாம் இது செய்தவள் யாரோ
எந்த இடத்தும் மனத்தும் இருப்பாள் எண்ணுபவருக்கு அருள் எண்ணம் மிகுந்தாள்
மந்திர வேதமயப் பொருள் ஆனாள் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (4)

மாணிக்கம்
காணக் கிடையாக் கதியானவளே கருதக் கிடையாக் கலையானவளே
பூணக்கிடையாக் பொலிவானவளே புனையக் கிடையாப் புதுமைத் தவளே
நாணித் திருநாமமும் நின் துதியும் நவிலாதவரை நாடாதவளே
மாணிக்க ஒளிக்கதிரே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (5)

மரகதம்
மரகத வடிவே சரணம் சரணம் மதுரித பதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம் ச்ருதி ஜதி லயமே இசையே சரணம்
அர ஹர சிவ என்று அடியவர் குழும் அவர் அருள் பெற அருள் அமுதே சரணம்
வர நவநிதியே சரணம் சரணம் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (6)

கோமேதகம்
பூமேவிய நான் புரியும் செயல்கள் பொன்றாப் பயனும் குன்றா வரமும்
தீமேல் இடினும் ஜெயசக்தி எனத் திடமாய் அடியேன் மொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வான் நிலவே குழல் யாழ் மொழியே வருவாய் தருவாய்
மாமேருவிலே வளர் கோகிலமே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (7)

பத்மராகம்(புஷ்பராகம்)
ரஞ்சினி நந்தினி அங்கணி பதும ராகவி காஸவி யாபினி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணி சாம்பவி சந்திர கலாதரி ராணி
அஞ்சன மேனி அலங்கிருத பூரணி அம்ருத ஸ்வ‌ரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள‌ மேரு சிருங்க நிவாஸினி மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (8)

வைடூர்யம்
வலை ஒத்த வினை கலை ஒத்த மனம் மருளப் பறையாறு ஒலி ஒத்த விதால்
நிலையற்று எளியேன் முடியத் தகுமோ நிகளம் துகளாக வரம் தருவாய்
அலைய‌ற்று அசைவற்று அநுபூதி பெறும் அடியார் முடிவாழ் வைடூரியமே
மலையத்துவசன் மகளே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (9)

நூற்பயன்
எவர் எத்தினமும் இசைவாய் லலிதா நவரத்தின மாலை நவின்றிடுவார்
அவர் அற்புத சக்தி எலாம் அடைவார் சிவரத்தினமாய்த் திகழ்வார் அவரே (10)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments