விடகிலேன் அடிநாயேன் பாடல் வரிகள் (vitakilen atinayen) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவையாறு தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருவையாறு
சுவாமி : செம்பொற்சோதீசுவரர்
அம்பாள் : அறம்வளர்த்தநாயகி
விடகிலேன் அடிநாயேன்
விடகிலேன் அடிநாயேன்
வேண்டியக்கால் யாதொன்றும்
இடகிலேன் அமணர்கள்தம்
அறவுறைகேட் டலமலந்தேன்
தொடர்கின்றேன் உன்னுடைய
தூமலர்ச்சே வடிகாண்பான்
அடைகின்றேன் ஐயாறர்க்
காளாய்நான் உய்ந்தேனே. 1
செம்பவளத் திருவுருவர்
திகழ்சோதி குழைக்காதர்
கொம்பமருங் கொடிமருங்குற்
கோல்வளையா ளொருபாகர்
வம்பவிழும் மலர்க்கொன்றை
வளர்சடைமேல் வைத்துகந்த
அம்பவள ஐயாறர்க்
காளாய்நான் உய்ந்தேனே. 2
நணியானே சேயானே
நம்பானே செம்பொன்னின்
துணியானே தோலானே
சுண்ணவெண் ணீற்றானே
மணியானே வானவர்க்கு
மருந்தாகிப் பிணிதீர்க்கும்
அணியானே ஐயாறர்க்
காளாய்நான் உய்ந்தேனே. 3
ஊழித்தீ யாய்நின்றாய்
உள்குவார் உள்ளத்தாய்
வாழித்தீ யாய்நின்றாய்
வாழ்த்துவார் வாயானே
பாழித்தீ யாய்நின்றாய்
படர்சடைமேற் பனிமதியம்
ஆழித்தீ ஐயாறார்க்
காளாய்நான் உய்ந்தேனே. 4
சடையானே சடையிடையே
தவழுந்தண் மதியானே
விடையானே விடையேறிப்
புரமெரித்த வித்தகனே
உடையானே உடைதலைகொண்
டூரூருண் பலிக்குழலும்
அடையானே ஐயாறர்க்
காளாய்நான் உய்ந்தேனே. 5
நீரானே தீயானே
நெதியானே கதியானே
ஊரானே உலகானே
உடலானே உயிரானே
பேரானே பிறைசூடீ
பிணிதீர்க்கும் பெருமானென்
றாராத ஐயாறர்க்
காளாய்நான் உய்ந்தேனே. 6
கண்ணானாய் மணியானாய்
கருத்தானாய் *அருத்தானாய்
எண்ணானாய் எழுத்தானாய்
எழுத்தினுக்கோர் இயல்பானாய்
விண்ணானாய் விண்ணிடையே புரமெரித்த வேதியனே
அண்ணான ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.
* அருத்தனாயென்பதற்கு – உண்ணப்படும் பொருள்களாயின
எனப் பொருள்படுகின்றது. 7
மின்னானாய் உருமானாய்
வேதத்தின் பொருளானாய்
பொன்னானாய் மணியானாய்
பொருகடல்வாய் முத்தானாய்
நின்னானார் இருவர்க்குங்
காண்பரிய நிமிர்சோதி
அன்னானே ஐயாறர்க்
காளாய்நான் உய்ந்தேனே. 8
முத்திசையும் புனற்பொன்னி
மொய்பவளங் கொழித்துந்தப்
பத்தர்பலர் நீர்மூழ்கிப்
பலகாலும் பணிந்தேத்த
எத்திசையும் வானவர்கள்
எம்பெருமா னெனஇறைஞ்சும்
அத்திசையாம் ஐயாறர்க்
காளாய்நான் உய்ந்தேனே. 9
கருவரைசூழ் கடலிலங்கைக்
கோமானைக் கருத்தழியத்
திருவிரலால் உதகரணஞ்
செய்துகந்த சிவமூர்த்தி
பெருவரைசூழ் வையகத்தார்
பேர்நந்தி என்றேத்தும்
அருவரைசூழ் ஐயாறர்க்
காளாய்நான் உய்ந்தேனே.
திருச்சிற்றம்பலம்
ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…
அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…
villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…
Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…
Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…
விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…