தளிரிள வளரென பாடல் வரிகள் (talirila valarena) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவாய்மூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவாய்மூர்
சுவாமி : வாய்மூர் நாதர்
அம்பாள் : பாலின் நன்மொழியாள்
தளிரிள வளரென
தளிரிள வளரென உமைபாடத்
தாள மிடவோர் கழல்வீசிக்
கிளரிள மணியர வரையார்த்
தாடும் வேடக் கிறிமையார்
விளரிள முலையவர்க் கருள்நல்கி
வெண்ணீ றணிந்தோர் சென்னியின்மேல்
வளரிள மதியமொ டிவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே. 1
வெந்தழல் வடிவினர் பொடிப்பூசி
விரிதரு கோவண வுடைமேலோர்
பந்தஞ்செய் தரவசைத் தொலிபாடிப்
பலபல கடைதொறும் பலிதேர்வார்
சிந்தனை புகுந்தெனக் கருள்நல்கிச்
செஞ்சுடர் வண்ணர்தம் மடிபரவ
வந்தனை பலசெய இவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே. 2
பண்ணிற் பொலிந்த வீணையர்
பதினெண் கணமு முணராநஞ்
சுண்ணப் பொலிந்த மிடற்றினார்
உள்ள முருகி லுடனாவார்
சுண்ணப் பொடிநீ றணிமார்பர்
சுடர்பொற் சடைமேல் திகழ்கின்ற
வண்ணப் பிறையோ டிவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே. 3
எரிகிளர் மதியமொ டெழில் நுதன்மேல்
எறிபொறி யரவினொ டாறுமூழ்க
விரிகிளர் சடையினர் விடையேறி
வெருவவந் திடர்செய்த விகிர்தனார்
புரிகிளர் பொடியணி திருவகலம்
பொன்செய்த வாய்மையர் பொன்மிளிரும்
வரியர வரைக்கசைத் திவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே. 4
அஞ்சன மணிவணம் எழில்நிறமா
வகமிட றணிகொள வுடல்திமில
நஞ்சினை யமரர்கள் அமுதமென
நண்ணிய நறுநுதல் உமைநடுங்க
வெஞ்சின மால்களி யானையின்தோல்
வெருவுறப் போர்த்ததன் நிறமுமஃதே
வஞ்சனை வடிவினொ டிவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே. 5
அல்லிய மலர்புல்கு விரிகுழலார்
கழலிணை யடிநிழ லவைபரவ
எல்லியம் போதுகொண் டெரியேந்தி
யெழிலொடு தொழிலவை யிசையவல்லார்
சொல்லிய அருமறை யிசைபாடிச்
சூடிள மதியினர் தோடுபெய்து
வல்லியந் தோலுடுத் திவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே. 6
கடிபடு கொன்றைநன் மலர்திகழுங்
கண்ணியர் விண்ணவர் கனமணிசேர்
முடிபில்கும் இறையவர் மறுகின்நல்லார்
முறைமுறை பலிபெய முறுவல்செய்வார்
பொடியணி வடிவொடு திருவகலம்
பொன்னென மிளிர்வதொர் அரவினொடும்
வடிநுனை மழுவினொ டிவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே. 7
கட்டிணை புதுமலர்க் கமழ்கொன்றைக்
கண்ணியர் வீணையர் தாமுமஃதே
எட்டுணை சாந்தமொ டுமைதுணையா
இறைவனா ருறைவதொர் இடம்வினவில்
பட்டிணை யகலல்குல் விரிகுழலார்
பாவையர் பலியெதிர் கொணர்ந்துபெய்ய
வட்டணை யாடலொ டிவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே. 8
ஏனம ருப்பினொ டெழிலாமை
யிசையப் பூண்டோ ரேறேறிக்
கானம திடமா வுறைகின்ற
கள்வர் கனவில் துயர்செய்து
தேனுண மலர்கள் உந்திவிம்மித்
திகழ்பொற் சடைமேல் திகழ்கின்ற
வானநன் மதியினொ டிவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே. 9
சூடல்வெண் பிறையினர் சுடர்முடியர்
சுண்ணவெண் ணீற்றினர் சுடர்மழுவர்
பாடல்வண் டிசைமுரல் கொன்றையந்தார்
பாம்பொடு நூலவை பசைந்திலங்கக்
கோடனன் முகிழ்விரல் கூப்பிநல்லார்
குறையுறு பலியெதிர் கொணர்ந்துபெய்ய
வாடல்வெண் டலைபிடித் திவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே. 10
திங்களொ டருவரைப் பொழிற்சோலைத்
தேனலங் கானலந் திருவாய்மூர்
அங்கமொ டருமறை யொலிபாடல்
அழல்நிற வண்ணர்தம் மடிபரவி
நங்கள்தம் வினைகெட மொழியவல்ல
ஞானசம் பந்தன் தமிழ்மாலை
தங்கிய மனத்தினால் தொழுதெழுவார்
தமர்நெறி யுலகுக்கோர் தவநெறியே.
திருச்சிற்றம்பலம்
ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…
அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…
villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…
Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…
Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…
விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…