மானின்நேர்விழி மாதராய்வழு பாடல் வரிகள் (maninnervili matarayvalu) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருஆலவாய் – மதுரை தலம் பாண்டியநாடு நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : பாண்டியநாடு
தலம் : திருஆலவாய் – மதுரை
சுவாமி : சொக்கலிங்கப்பெருமான்
அம்பாள் : அங்கயற்கண்ணி

மானின்நேர்விழி மாதராய்வழு

மானின்நேர்விழி மாதராய்வழு
திக்குமாபெருந் தேவிகேள்
பானல்வாயொரு பாலனீங்கிவன்
என்றுநீபரி வெய்திடேல்
ஆனைமாமலை ஆதியாய
இடங்களிற்பல அல்லல்சேர்
ஈனர்கட்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே. 1

ஆகமத்தொடு மந்திரங்க
ளமைந்தசங்கத பங்கமாப்
பாகதத்தொ டிரைத்துரைத்த
சனங்கள்வெட்குறு பக்கமா
மாகதக்கரி போல்திரிந்து
புரிந்துநின்றுணும் மாசுசேர்
ஆகதர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே. 2

அத்தகுபொருள் உண்டுமில்லையு
மென்றுநின்றவர்க் கச்சமா
ஒத்தொவ்வாமை மொழிந்துவாதில்
அழிந்தெழுந்த கவிப்பெயர்ச்
சத்திரத்தின் மடிந்தொடிந்து
சனங்கள்வெட்குற நக்கமே
சித்திரர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே. 3

சந்துசேனனும் இந்துசேனனுந்
தருமசேனனுங் கருமைசேர்
கந்துசேனனுங் கனகசேனனும்
முதலதாகிய பெயர்கொளா
மந்திபோல்திரிந் தாரியத்தொடு
செந்தமிழ்ப்பயன் அறிகிலா
அந்தகர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே. 4

கூட்டினார்கிளி யின்விருத்தம்
உரைத்ததோரொலி யின்தொழிற்
பாட்டுமெய்சொலிப் பக்கமேசெலும்
எக்கர்தங்களைப் பல்லறங்
காட்டியேவரு மாடெலாங்கவர்
கையரைக்கசி வொன்றிலாச்
சேட்டைகட்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே. 5

கனகநந்தியும் புட்பநந்தியும்
பவணநந்தியுங் குமணமா
சுனகநந்தியுங் குனகநந்தியுந்
திவணநந்தியும் மொழிகொளா
அனகநந்தியர் மதுவொழிந்தவ
மேதவம்புரி வோமெனுஞ்
சினகருக்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே. 6

பந்தணம்மவை யொன்றிலம்பரி
வொன்றிலம்மென வாசக
மந்தணம்பல பேசிமாசறு
சீர்மையின்றிய நாயமே
அந்தணம்மரு கந்தணம்மதி
புத்தணம்மது சித்தணச்
சிந்தணர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே. 7

மேலெனக்கெதி ரில்லையென்ற
அரக்கனார்மிகை செற்றதீப்
போலியைப்பணி யக்கிலாதொரு
பொய்த்தவங்கொடு குண்டிகை
பீலிகைக்கொடு பாயிடுக்கி
நடுக்கியேபிறர் பின்செலுஞ்
சீலிகட்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே. 8

பூமகற்கும் அரிக்குமோர்வரு
புண்ணியன்னடி போற்றிலார்
சாமவத்தையி னார்கள்போல்தலை
யைப்பறித்தொரு பொய்த்தவம்
வேமவத்தைசெ லுத்திமெய்ப்பொடி
யட்டிவாய்சக திக்குநேர்
ஆமவர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே. 9

தங்களுக்குமச் சாக்கியர்க்குந்
தரிப்பொணாதநற் சேவடி
எங்கள்நாயகன் ஏத்தொழிந்திடுக்
கேமடுத்தொரு பொய்த்தவம்
பொங்குநூல்வழி யன்றியேபுல
வோர்களைப்பழிக் கும்பொலா
அங்கதர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே. 10

எக்கராம்அமண் கையருக்கெளி
யேனலேன்திரு ஆலவாய்ச்
சொக்கனென்னு ளிருக்கவேதுளங்
கும்முடித்தென்னன் முன்னிவை
தக்கசீர்ப்புக லிக்குமன்தமிழ்
நாதன்ஞானசம் பந்தன்வாய்
ஒக்கவேயுரை செய்தபத்தும்
உரைப்பவர்க்கிடர் இல்லையே.

இது பாண்டியராசனுடைய சுரப்பிணி தீர்ப்பதற்காகத் திருஞான சம்பந்த
எழுந்தருளியிருக்கும்போது பாண்டிமாதேவி யாகிய மங்கையர்க்கரசியார்கண்டு
திருமேனி மிகுந்த பாலியமாயிருக்கின்றதுமன்றித் தனிமையாயுமிருக்கின்றது;
சமணர்களோ சரீரதிடமுள்ளவர்களும் பலருமாயிருக்கின்றார் களென்று உட்பரிவுற்றக்
குறிப்பினைத் திருஞானசம்பந்த
கொண்டு அன்னையே அஞ்சவேண்டு வதில்லை யென்று கட்டளையிட்ட பதிகம்.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment