திருச்சிற்றம்பலம் – kovil mootha thirupathigam lyrics
உடையாள் உன்தன் நடுவிருக்கும் உடையாள்
நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும் இருப்ப
தானால் அடியேன்உன்
அடியார் நடுவுள் இருக்கும் அரு ளைப்புரி
யாய் பொன்னம்பலத்தெம்
முடியா முதலே என்கருத்து முடியும்
வண்ணம் முன்னின்றே. 1
முன்னின் றாண்டாய் எனைமுன்னம் யானும்
அதுவே முயல்வுற்றுப்
பின்னின் றேவல் செய்கின்றேன் பிற்பட்
டொழிந்தேன் பெம்மானே
என்னின் றருளி வரநின்று போந்தி
டென்னா விடில் அடியார்
உன்னின் றிவனார் என்னாரோ பொன்னம்
பலக்கூத் துகந்தானே. 2
உகந்தானே அன்புடை அடிமைக் குருகா
வுள்ளத் துணர்விலியேன்
சகந்தான் அறிய முறையிட்டால் தக்க
வாறன் றென்னாரோ
மகந்தான் செய்து வழிவந்தார் வாழ
வாழ்ந்தாய் அடியேற்குன்
முகந்தான் தாரா விடின்முடிவேன் பொன்னம்
பலத்தெம் முழுமுதலே. 3
முழுமுத லேஐம் புலனுக்கும் மூவர்க்
கும் என்தனக்கும்
வழிமுதலேநின் பழவடி யார்
திரள்வான் குழுமிக்
கெழுமுத லேயருள் தந்தி ருக்கஇரங்
குங்கொல்லோ என்று
அழுமதுவேயன் றிமற்றென் செய்கேன்
பொன்னம் பலத்தரைசே. 4
அரைசே பொன்னம் பலத்தாடும்
அமுதே என்றுன் அருள்நோக்கி
இரைதேர் கொக்கொத் திரவுபகல் ஏசற்
றிருந்தே வேசற்றேன்
கரைசேர் அடியார் களிசிறப்பக்
காட்சி கொடுத்துன் அடியேன்பால்
பிரைசேர் பாலின் நெய்போலப் பேசா
திருந்தால் ஏசாரோ. 5
ஏசா நிற்பர் என்னைஉனக் கடியான்
என்று பிறரெல்லாம்
பேசா நிற்பர் யான்தானும் பேணா
நிற்பேன் நின்னருளே
தேசா நேசர் சூழ்ந்திருக்குந் திருவோ
லக்கஞ் சேவிக்க
ஈசா பொன்னம் பலத்தாடும் எந்தாய்
இனித்தான் இரங்காயே. 6
இரங்கும் நமக்கம் பலக்கூத்தன் என்றென்று
ஏமாந் திருப்பேனை
அருங்கற் பனைகற் பித்தாண்டாய்
ஆள்வா ரிலிமா டாவேனோ
நெருங்கும் அடியார் களும்நீயும் நின்று
நிலாவி விளையாடும்
மருங்கே சார்ந்து வரஎங்கள் வாழ்வே
வாவென்று அருளாயே. 7
அருளா தொழிந்தால் அடியேனை அஞ்சேல்
என்பார் ஆர்இங்குப்
பொருளா என்னைப் புகுந்தாண்ட பொன்னே
பொன்னம் பலக்கூத்தா
மருளார் மனத்தோ டுனைப்பிரிந்து வருந்து
வேனை வாவென்றுன்
தெருளார் கூட்டங் காட்டாயேல் செத்தே
போனாற் சிரியாரோ. 8
சிரிப்பார் களிப்பார் தேனிப்பார் திரண்டு
திரண்டுன் திருவார்த்தை
விரிப்பார் கேட்பார் மெச்சுவார் வெவ்வே
றிருந்துன் திருநாமம்
தரிப்பார் பொன்னம் பலத்தாடும் தலைவா
என்பார் அவர்முன்னே
நரிப்பாய் நாயேன் இருப்பேனோ நம்பி
இனித்தான் நல்காயே. 9
நல்கா தொழியான் நமக்கென்றுன் நாமம்
பிதற்றி நயனநீர்
மல்கா வாழ்த்தா வாய்குழறா வணங்கா
மனத்தால் நினைந்துருகிப்
பல்காலுன்னைப் பாவித்துப் பரவிப்
பொன்னம் பலமென்றே
ஒல்கா நிற்கும் உயிர்க்கிரங்கி அருளாய்
என்னை உடையானே. 10
அருளியவர் : மாணிக்கவாசகர்
தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு : சோழநாடு காவிரி வடகரை
சிறப்பு: அநாதியாகிய சற்காரியம்; அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…
அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…
villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…
Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…
Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…
விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…