கள்ளார்ந்த பூங்கொன்றை பாடல் வரிகள் (kallarnta punkonrai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்புள்ளிருக்குவேளூர் – வைத்தீசுவரன்கோவில் தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருப்புள்ளிருக்குவேளூர் – வைத்தீசுவரன்கோவில்
சுவாமி : வைத்தியநாதர்
அம்பாள் : தையல்நாயகி
கள்ளார்ந்த பூங்கொன்றை
கள்ளார்ந்த பூங்கொன்றை
மதமத்தங் கதிர்மதியம்
உள்ளார்ந்த சடைமுடி எம்
பெருமானார் உறையுமிடம்
தள்ளாய சம்பாதி
சடாயென்பார் தாமிருவர்
புள்ளானார்க் கரையனிடம்
புள்ளிருக்கு வேளூரே. 1
தையலாள் ஒருபாகஞ்
சடைமேலாள் அவளோடும்
ஐயந்தேர்ந் துழல்வாரோர்
அந்தணனார் உறையுமிடம்
மெய்சொல்லா இராவணனை
மேலோடி யீடழித்துப்
பொய்சொல்லா துயிர்போனான்
புள்ளிருக்கு வேளூரே. 2
வாசநலஞ் செய்திமையோர்
நாடோறும் மலர்தூவ
ஈசனெம் பெருமானார்
இனிதாக உறையுமிடம்
யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங்
கொருநாளும் ஒழியாமே
பூசனைசெய் தினிதிருந்தான்
புள்ளிருக்கு வேளூரே. 3
மாகாயம் பெரியதொரு
மானுரிதோ லுடையாடை
ஏகாய மிட்டுகந்த
எரியாடி உறையுமிடம்
ஆகாயந் தேரோடும்
இராவணனை அமரின்கண்
போகாமே பொருதழித்தான்
புள்ளிருக்கு வேளூரே. 4
கீதத்தை மிகப்பாடும்
அடியார்கள் குடியாகப்
பாதத்தைத் தொழநின்ற
பரஞ்சோதி பயிலுமிடம்
வேதத்தின் மந்திரத்தால்
வெண்மணலே சிவமாகப்
போதத்தால் வழிபட்டான்
புள்ளிருக்கு வேளூரே. 5
திறங்கொண்ட அடியார்மேல்
தீவினைநோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்மம்
உரைத்தபிரான் அமருமிடம்
மறங்கொண்டங் கிராவணன்றன்
வலிகருதி வந்தானைப்
புறங்கண்ட சடாயென்பான்
புள்ளிருக்கு வேளூரே. 6
அத்தியின்ஈ ருரிமூடி
அழகாக அனலேந்திப்
பித்தரைப்போற் பலிதிரியும்
பெருமானார் பேணுமிடம்
பத்தியினால் வழிபட்டுப்
பலகாலந் தவஞ்செய்து
புத்தியொன்ற வைத்துகந்தான்
புள்ளிருக்கு வேளூரே. 7
பண்ணொன்ற இசைபாடும்
அடியார்கள் குடியாக
மண்ணின்றி விண்கொடுக்கும்
மணிகண்டன் மருவுமிடம்
எண்ணின்றி முக்கோடி
வாணாள துடையானைப்
புண்ணொன்றப் பொருதழித்தான்
புள்ளிருக்கு வேளூரே. 8
வேதித்தார் புரமூன்றும்
வெங்கணையால் வெந்தவியச்
சாதித்த வில்லாளி
கண்ணாளன் சாருமிடம்
ஆதித்தன் மகனென்ன
அகன்ஞாலத் தவரோடும்
போதித்த சடாயென்பான்
புள்ளிருக்கு வேளூரே. 9
கடுத்துவருங் கங்கைதனைக்
கமழ்சடையொன் றாடாமே
தடுத்தவரெம் பெருமானார்
தாமினிதா யுறையுமிடம்
விடைத்துவரும் இலங்கைக்கோன்
மலங்கச்சென் றிராமற்காய்ப்
புடைத்தவனைப் பொருதழித்தான்
புள்ளிருக்கு வேளூரே. 10
செடியாய வுடல்தீர்ப்பான்
தீவினைக்கோர் மருந்தாவான்
பொடியாடிக் கடிமைசெய்த
புள்ளிருக்கு வேளூரைக்
கடியார்ந்த பொழில்காழிக்
கவுணியன்சம் பந்தன்சொல்
மடியாது சொல்லவல்லார்க்
கில்லையாம் மறுபிறப்பே.
திருச்சிற்றம்பலம்
ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…
அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…
villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…
Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…
Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…
விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…